பதிவு செய்த நாள்
02 செப்2013
09:39
புதுடில்லி: பெட்ரோல் பங்க்குகளில், பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் நேரத்தை குறைக்கும் வகையில், இரவு, 8:00 மணி முதல், காலை, 8:00 மணி வரை வரை மூட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், 16 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை கட்டுப்படுத்த முடியும் என மத்திய அரசுக்கு, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், வீரப்ப மொய்லி பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க டாலருக்கு இணையாக, இந்திய ரூபாயின் மதிப்பு, நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதால், மத்திய அரசின் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக, நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதை சமாளிக்க, மத்திய அரசு போராடி வருகிறது.அதிக மக்கள் தொகையுள்ள இந்தியாவில், பெட்ரோலியப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; மோட்டார் சைக்கிள், கார்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. வாகனங்களை இயக்க பயன்படும் பெட்ரோல், டீசலுக்காக, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு தான், அன்னிய செலாவணி அதிகமாக கொடுக்க வேண்டியுள்ளது.கச்சா எண்ணெய்க்கான தொகையை, அமெரிக்க டாலர் மதிப்பில் வழங்க வேண்டியிருப்பதால், அன்னிய செலாவணி அதிகம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
""பெட்ரோலியப் பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்,'' என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி கூறியுள்ளார். குறிப்பாக பெட்ரோல், டீசல் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில், பெட்ரோல் பங்க்குகளை, இரவு, 8:00 மணி முதல், காலை, 8:00 மணி வரை மூடி வைக்கும் யோசனையும் பெட்ரோலிய அமைச்சகம் வசம் உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, அமைச்சர் வீரப்ப மொய்லி, டில்லியில் கூறியதாவது:பெட்ரோல் விற்பனையை கட்டுப்படுத்துவது பற்றி யோசித்து வருகிறோம். இரவு நேரத்தில், பெட்ரோல் பங்க்குகளை மூடி வைப்பதன் மூலம், 16 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை மிச்சப்படுத்த முடியும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இது ஒரு யோசனை தான். இதை நாங்கள் செயல்படுத்த மாட்டோம். இது என்னுடைய கருத்தும் அல்ல.பெட்ரோலியப் பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், எண்ணெய் நிறுவனங்களுக்கு, 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சிக்கன நடவடிக்கை குறித்து, வரும் 16ம் தேதி முதல், 6 வார காலத்திற்கு சிக்கன வாரம் கடைபிடிக்கப்படும். இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும், பெட்ரோல் சிக்கனம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு பிரசாரத்தை துவக்க உள்ளது.இரண்டு, மூன்று கார்களை வைத்திருப்பவர்கள், ஒரு காரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது போன்ற பல ஆலோசனைகளில் ஒன்று தான், இரவு நேரத்தில் பங்க்குகளை மூட வேண்டும் என்ற யோசனை. நாங்கள் இந்த முடிவை எடுக்க மாட்டோம். பல்வேறு யோசனைகளில் இதுவும் ஒன்று.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|