பதிவு செய்த நாள்
02 செப்2013
09:41
மது ஆலைகள், உற்பத்தி செலவை காரணம் காட்டி, கொள்முதல் விலையை அதிகரிக்க கோரி வருவதால், நடப்பாண்டு, விற்பனை இலக்கை பூர்த்தி செய்யும் வகையில், மதுபானங்களின் விலை உயர்வை அரங்கேற்றுவது குறித்து, அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர்.
தமிழகத்தில், 2003ம் ஆண்டு முதல், மது விற்பனையை, அரசே, "டாஸ்மாக்' மூலம் மேற்கொண்டு வருகிறது. மது விற்பனையில், ஆண்டுக்கு ஆண்டு புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருவதாக கூறினாலும், கடந்த நிதி ஆண்டில், விற்பனை இலக்கு பூர்த்தி செய்யப்படவில்லை.டாஸ்மாக் இணையதள தகவலின்படி, 2010ம் நிதியாண்டில், ஆண்டு விற்பனை, 15 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. 2012ல், மது விற்பனை, 21,681 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது.விற்பனை இலக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாயாக நிர்ணயித்து இருந்த நிலையில், இலக்கில், குறைவு ஏற்பட்டதை அடுத்து, நடப்பு நிதியாண்டில், விற்பனை இலக்கை அதிகரிக்க, அதிகாரிகள் களம் இறங்கி உள்ளனர்.டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பீர், ஐ.எம்.எப்.எல்., சரக்குகளின் விலையை உயர்த்துவதற்கான பட்டியல், தயார் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு, செப்., 27ம் தேதி, சரக்குகளின் விலை உயர்வு அமல்படுத்தப்பட்டது.
ஆனால், பீர் ரகங்களின் விலை உயர்வு, ஒரு மாதத்துக்கு முன், உயர்வு செய்யப்பட்டது. தற்போது, டாஸ்மாக்குக்கு, மது பாட்டில்களை வினியோகம் செய்து வரும் நிறுவனங்கள், மது தயாரிப்புக்கான செலவு அதிகரிப்பை காரணம் காட்டி, விலையை உயர்த்தி தர கோரிக்கை விடுத்து வருகின்றன.அமெரிக்க டாலருக்கு இணையான, இந்திய ரூபாயின் மதிப்பு, தொடர்ந்து சரிந்து வருவதால், வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களின் விலையும் அதிரித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்துக்கு, அவற்றை வினியோகம் செய்யும் நிறுவனங்கள், மதுபானங்களின் விலையை அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளன.
மது ஆலைகளின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது. டாஸ்மாக்கில், கடந்த நிதியாண்டு, விற்பனை இலக்கு பூர்த்தியாகாததால், நடப்பாண்டில், விற்பனை இலக்கை பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.விலை உயர்வை அரங்கேற்றுவதற்கான பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். தற்போது, குவார்ட்டர் பாட்டிலின் குறைந்தபட்ச விலை அதிகரிப்பு என்பதை, 10 ரூபாயாகவும், ஆப் பாட்டிலுக்கு, 20 ரூபாய், புல் பாட்டிலுக்கு, 50 ரூபாய் வரை, விலை உயர்வுக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு, துறை அமைச்சர் மூலம், முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது சிறப்பு நிருபர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|