பதிவு செய்த நாள்
02 செப்2013
10:03
மும்பை:இந்திய ரிசர்வ் வங்கி கவர்னராக, கடந்த ஐந்து ஆண்டுகளாக பதவி வகித்த, சுப்பாராவ், நாளை மறுநாள் ஓய்வு பெறுகிறார். அவரை தொடர்ந்து, ரகுராம் ராஜன், புதிய கவர்னராக பொறுப்பு ஏற்க உள்ளார்.மத்திய நிதித் துறை செயலராக பதவி வகித்து வந்த சுப்பாராவ், 2008 செப்டம்பரில், இக்கட்டான சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பு ஏற்றார். சர்வதேச அளவில், பொருளாதார சிக்கல் நிலவிய சூழ்நிலையில் பதவியேற்ற சுப்பாராவ், மிகவும் திறமையாக செயல்பட்டு பாராட்டுகளை பெற்றார்.தொழில் வளர்ச்சியை பாதிக்காத வகையில், அதே சமயம் பணவீக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்து, சவாலான சூழ்நிலையை சமாளித்தார். இருந்தாலும், அந்த சமயத்தில், ரிசர்வ் வங்கி எடுத்த சில உறுதியான நடவடிக்கைகள், கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின.
வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம், வங்கிகளின் வட்டி விகிதம் ஆகியவற்றில், சுப்பாராவ் கடுமையாக நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்தன.சுப்பாராவ் காலத்தில், ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும், ஓரிரு விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தது. பல நேரங்களில், சுப்பாராவ் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பணவீக்கம், விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வருவதில், முக்கியத்துவம் செலுத்தினார்.
இருப்பினும், சுப்பாராவ், கடந்த ஐந்தாண்டுகளாக மிக முக்கியமான, இப்பதவியை வகித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. சுப்பாராவைத் தொடர்ந்து, ரகுராம் ராஜன், புது கவர்னராக பதவி ஏற்க உள்ளார். இவர், பிரபலமான பொருளாதார நிபுணர். 2008ல் அமெரிக்கா கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என, 2005லேயே துல்லியமாகவும், துணிவுடனும் அறுதியிட்டு சொன்ன வித்தகர்.தொழில் வளர்ச்சி சரிந்து, ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், ரகுராமன் ராஜன், கடும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவில், தனிநபர் கடன்கள் வழங்கும் விஷயத்தில், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிநபர் கடன் வாங்குவோர், அதை கொண்டு தங்கத்தை வாங்காமல், பார்த்து கொள்ள வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளது."தங்க நகைகள் வாங்குவதற்கு கடன் அளிக்க கூடாது' என, எச்சரித்துள்ளது. தங்க இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில், வங்கிகளுக்கும், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும், இது தொடர்பாக கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|