பதிவு செய்த நாள்
02 செப்2013
10:06
சென்னை:தடைக்காலத்தை மிஞ்சும் வகையில், சென்னையில் மீன் வகைகளின் விலை திடீரென எகிறியுள்ளது, அசைவ பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வரத்து குறைவால், 25 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது என, மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், மீன்பிடி தடைக்காலம் உள்ள காலத்தில் மட்டுமே, மீன் வகைகளின் விலை அதிகரிக்கும். ஆனால், தடைக்காலம் முடிந்து, மீன்பிடி தொழில் சூடுபிடித்தாலும், மீன்களின் விலை குறையாமலேயே இருந்தது. பின், கடந்த மாதம், மீன் விலை ஓரளவு கட்டுக்குள் வந்தது. ஆனால், அந்த நிலை நீடிக்கவில்லை.எகிறியது
தற்போது, மீன் விலை எப்போதுமில்லாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில், 600 ரூபாய்க்கு கிடைத்த, ஒரு கிலோ வஞ்சிரத்தின் விலை நேற்று, 750 - 800 ரூபாய் வரை விற்றது. 350 - 400 ரூபாய்க்கு கிடைத்த, இரண்டாம் ரகம் வஞ்சிரம், 500 - 550 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.ஏற்றுமதி தரம் வாய்ந்த, இறால் கிலோ, 1,050 ரூபாய் என்ற அளவில் விற்கிறது. 300-350 ரூபாய்க்கு கிடைத்த இரண்டாம் ரக இறால், 450 - 500 ரூபாய் வரை சென்றுள்ளது. 400 ரூபாய்க்கு கிடைத்த கொடுவா, 700 ரூபாய் வரையும், 150 ரூபாய்க்கு கிடைத்த சங்கரா, வரிச்சூறை, 250 ரூபாய் வரையும் உயர்ந்துள்ளது. 100 ரூபாய்க்குள் கிடைத்த தும்பிலி, மத்தி, ஊசி கடமாவும், 150 ரூபாய் வரை எகிறியுள்ளது.
ஏலத்தில் மீன் எடுக்க, காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு, மொத்த வியாபாரிகள், பொதுமக்கள் செல்வது வழக்கம். நேற்று வழக்கத்தை விட, மீன்களின் ஏல விலை அதிகரித்தது, சாதாரண மக்களை மட்டுமல்ல, வியாபாரிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
காரணம் என்ன?:இதுகுறித்து, மீன் ஏற்றுமதி வர்த்தகர் நாஞ்சில் ரவி கூறியதாவது:கடலில் தட்ப, வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மீன் வரத்து குறைந்துள்ளது. தமிழக மீனவர்கள், ஆந்திர கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு, சிறைபிடிக்கப்படுவதால், விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.தாது மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்டத்திலும், இலங்கை கடற்படையில் சிக்கியுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மீன்பிடி தடைபட்டுள்ளது.
அதனால், பிறமாவட்டங்களிலிருந்து சென்னைக்கு மீன் வரத்து குறைந்துள்ளது. கர்நாடகா, கேரளாவிலிருந்தும், தரமான மீன்கள் சென்னைக்கு வரவில்லை. எனவே, மீன்களின் விலை, வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.தொடர்ந்து டீசல் விலை அதிகரித்து வருவதால், மீன்பிடி தொழிலில் பல விசைப்படகு உரிமையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும், மீன் விலைகள் கட்டுக்குள் வர, இன்னும் ஓரிரு வாரம் வரை ஆகலாம் எனவும் மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அசைவ பிரியர்கள், "பர்சை' பதம் பார்க்காத விலையில். விதவிதமான மீன் உணவுகளை ருசிக்க, இன்னும் சில நாள் காத்திருக்க வேண்டும்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|