பதிவு செய்த நாள்
03 செப்2013
01:40
தட்பவெப்ப மாறுதல்:காரணமாக, தென் மாநிலங்களில், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக, தேயிலை உற்பத்தி சரிவடைந்து வருகிறது.நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவை உள்ளடக்கிய தென் மாநிலங்களின் பங்களிப்பு, 21 சதவீதமாக உள்ளது.வட மாநிலங்கள்:நடப்பாண்டு, ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங் களில், தென் மாநிலங்களின் தேயிலை உற்பத்தி, 1.7 சதவீதம் சரிவடைந்து, 11.54 கோடி கிலோவாக குறைந்துள்ளது.
இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 11.74 கோடி கிலோவாக இருந்தது.அதே சமயம், இதே காலத்தில், வட மாநிலங்களில் தேயிலை உற்பத்தி, 6.7 சதவீதம் அதிகரித்து, 26.25 கோடி கிலோவில் இருந்து, 28 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.வட மாநிலங்களில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால், மதிப்பீட்டு காலத்தில், நாட்டின் ஒட்டுமொத்த தேயிலை உற்பத்தி, 4.1 சதவீதம் உயர்ந்து, 38 கோடி கிலோவில் இருந்து, 39.5 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது.
சென்ற, 2012ம் முழு ஆண்டில், நாட்டின் ஒட்டுமொத்த தேயிலை உற்பத்தி, முந்தைய ஆண்டை விட, ஒரு சதவீதம் அதிகரித்து, 112 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.நாட்டின் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், கடந்த ஆண்டு முதல், இந்திய தேயிலை ஏல மையங்களில், அதன் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.தேசிய அளவில், நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில்(ஜனவரி-ஜூன்), ஒரு கிலோ தேயிலை விலை, 13.2 சதவீதம் உயர்ந்து, 128.86 ரூபாயாக அதிகரித்துள்ளது.
தென் மாநிலங்களை பொறுத்தவரை, ஒரு கிலோ தேயிலை விலை, 23 சதவீதம் அதிகரித்து, 102.65 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.மழை பொழிவு:இது குறித்து, தென்னிந்திய ஐக்கிய பெருந்தோட்டப் பயிர்கள் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் ஆர். சஞ்சித் கூறியதாவது:தென் மாநிலங்களில், நடப்பாண்டின் முதல் காலாண்டில், வறட்சியும், இரண்டாவது காலாண்டில் கடுமையான மழைப்பொழிவும் இருந்தது. இந்த மாறுபட்ட பருவநிலை, தேயிலை பயிருக்கு உகந்தது அல்ல என்பதால், நடப்பாண்டு, அதன் உற்பத்தி குறையும்.மேலும், பல தேயிலைத் தோட்டங்களில், மறுசாகுபடி நடைபெறுகிறது. இதன் காரணமாகவும், நடப்பாண்டின் மூன்று மற்றும் நான்காம் காலாண்டுகளில், தேயிலை உற்பத்தி குறையும்.இத்தகைய போக்கால், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக, தென் மாநிலங்களில் தேயிலை உற்பத்தி சரிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை:நடப்பாண்டு துவக்கத்தில், தேயிலையின் தேவைக்கு ஏற்ப, அதன் அளிப்பு இருந்தது. அதனால், நடப்பாண்டு, தேயிலை விலை, உயரவோ, குறையவோ வாய்ப்பில்லை. தற்போதுள்ள விலையே நீடிக்கும்.தேயிலை உற்பத்தியும், ஏற்றுமதியும் குறைந்துள்ள போதிலும், அதன் தற்போதைய விலை உயர்வு, உள்நாட்டில் தேயிலை நுகர்வு அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.சர்வதேச சந்தையிலும் இது போன்ற நிலை உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, தேயிலைத் துறையில், இத்தகைய ஆரோக்கியமான சூழல் காணப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|