பதிவு செய்த நாள்
10 செப்2013
01:03
புதுடில்லி:இந்தியாவில் இருந்து அரிசி, நிலக்கடலை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை, ரஷ்யா நீக்கியுள்ளது. இது, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் அரிசியில் வண்டுகளும், நிலக்கடலையில் நிர்ணயிக்கப்பட்டதை விட, "அப்லடாக்சின்' என்ற நச்சுப் பொருளும் அதிகம் உள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியது.இதையடுத்து, கடந்த ஜனவரியில், இந்திய அரிசி, நிலக்கடலை ஆகியவற்றின் இறக்குமதிக்கு, ரஷ்யா தடை விதித்தது.இந்த தடையை நீக்க வேண்டும் என, இந்தியா கோரிக்கை விடுத்தது.
இது தொடர்பாக, கடந்த ஜூன் மாதம், ரஷ்ய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், இந்தியா வந்து, உணவு தானியங்களை பதப்படுத்தும் தொழிலகங்களை பார்வையிட்டனர்.அப்போது, உணவு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து, ரஷ்யக் குழுவினர் திருப்தி தெரிவித்ததாக, மத்திய உணவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
இதையடுத்து, ரஷ்ய அரசு, இந்திய அரிசி, நிலக்கடலை ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்ட தற்காலிக தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது.இந்த உத்தரவு, நடப்பு செப்டம்பர் 1ம் தேதி முதல், முன்தேதியிட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க, அதிக அளவில் ஏற்றுமதி மேற்கொள்ள வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவிற்கான அரிசி, நிலக்கடலை ஏற்றுமதி மீண்டும் துவங்கியுள்ளது என, அந்த அதிகாரி மேலும் கூறினார். இந்தியா, அரிசி உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியா, 61 ஆயிரம் டன் அரிசி, 3,700 டன் நிலக்கடலை ஆகியவற்றை, ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்து, 3.10 கோடி டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|