பதிவு செய்த நாள்
18 செப்2013
11:39

டில்லியில், ஒரு கிலோ வெங்காயம், 80 ரூபாய்க்கு விற்கப்படுவதால், பொதுமக்கள் மத்தியில், பெரும் கொந்தளிப்பு உருவாகியுள்ளது. அடுத்த சில நாட்களில், கிலோ, 100 ரூபாயை எட்டலாம் என்பதால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சமையலுக்கு, அன்றாடம் தேவையான பொருட்களில் மிகவும் முக்கியமானது வெங்காயம். அந்த வெங்காயத்தின் விலை, தற்போது ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. டில்லியில், மொத்த விற்பனை சந்தையில், 60 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயம், சில்லரை விற்பனையில், கிலோ, 70 முதல், 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், இதுதான் மிகவும் அதிகமான விலை.சில வாரங்களாக, ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, 60 முதல், 65 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த இரு நாட்களாக, கிலோ, 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. "வெங்காய சப்ளை குறைவாக இருப்பதால், வரும் நாட்களில், கிலோ, 100 ரூபாயை எட்டும்' என, டில்லியில், காய்கறிகள் மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் கூறினர்.டில்லிக்கு, பொதுவாக, பாகிஸ்தானில் இருந்தும், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும், வெங்காயம் வரும். அங்கிருந்து வர வேண்டிய, வெங்காயம் வராததும், டில்லியில் விலை உயர முக்கிய காரணம். இருப்பினும், தென் மாநிலங்களில் இருந்து, வெங்காயத்தை வரவழைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வெங்காய விலை உயர்வு தொடர்பாக, மத்திய உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஜூன் முதல் அக்டோபர் வரையிலான, காரீப் பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயம், தீபாவளியை ஒட்டி விற்பனைக்கு வரும். அதுவரை, நிலைமை கொஞ்சம் சிரமமாகவே இருக்கும். தீபாவளிக்குப் பின், விலை குறையும். மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அருகே உள்ள லசன்காவில், வெங்காய மொத்த விற்பனை சந்தை, உள்ளது.அங்கு, ஒரு கிலோ வெங்காயம், கிலோ, 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அங்கேயே விலை அப்படி என்றால், டில்லியைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. ஆனாலும், வெங்காயத்தை பதுக்கி வைப்போருக்கு எதிராக, அத்தியாவசிய பொருட்கள் தடுப்பு சட்டமான, "எஸ்மா'வின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சட்டத்தை, மாநில அரசுகள்தான் பயன்படுத்த முடியும். எனவே, மாநில அரசுகள் விரைந்து செயலாற்றினால், நிலைமை கட்டுக்குள் வரும்.
இவ்வாறு உணவு அமைச்சக அதிகாரிகள் கூறினர்.
மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ், டில்லியில் நேற்று இதுபற்றி கூறியதாவது: வெங்காய விலை அதிகரிப்பு, கவலையளிக்கிறது. ஆனாலும், விலையேற்றத்தை தடுத்து நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், அரசு எடுக்கும். அடுத்த, 15 நாட்களுக்குள், வெங்காயத்தின் விலை, குறைய வாய்ப்பு உள்ளது.அடுத்த மாதம், ஆந்திரா, தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களிலிருந்து, வெங்காயம் சந்தைக்கு வரத் துவங்கி விடும். வெங்காய இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், முதல் கட்டமாக, எகிப்திலிருந்து, 300 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனாலும், அந்த வெங்காயம் இன்னும் வந்து சேரவில்லை.இவ்வாறு அமைச்சர் தாமஸ் கூறினார்.
வெங்காயத்தை, ஏதோ உணவுப் பொருள் என்று மட்டும் பார்க்க முடியாது. வடமாநிலங்களைப் பொருத்தவரை, வெங்காயமானது, அரசியலை நிர்ணயிக்க கூடிய சக்தியாகவும் இருந்துள்ளது. 1990ம் ஆண்டுகளில், டில்லி, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில், அப்போது ஆட்சியிலிருந்த, அரசுகளை கவிழச் செய்தது, வெங்காய விலையேற்றமே.
வரும் நவம்பர் மாதத்தில், மத்திய பிரதேசம், டில்லி உட்பட, ஐந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, தற்போதைய வெங்காய விலையேற்றம் தொடர்ந்தால், அரசியல் களத்தில் பலமாக சூட்டைக் கிளப்பும் என்பதில், சந்தேகமில்லை.
-நமது டில்லி நிருபர்-
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|