பதிவு செய்த நாள்
28 செப்2013
13:52
மதுரை: உயிர்காக்கும் அத்தியாவசியமான, 348 மருந்துகளின் விலை, 20 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இது, நவ.,10 முதல் அமலாகும்.தேசிய மருந்துகள் விலைநிர்ணய ஆணையம், உயிர்காக்கும் 348 மருந்துகளின் விலையை, 20 சதவீதம் குறைத்து விற்கும்படி, ஆக. 26 ல், சுற்றறிக்கை வெளியிட்டது. மருந்து பொருட்களின், "பேக்கிங்' ல், விலையை மாற்றும் அதிகாரம், வினியோகஸ்தர், விற்பனையாளர்களுக்கு இல்லை; தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே செய்ய முடியும்.மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், பெரும்பாலும் மும்பை, டில்லியில் இருப்பதால் மருந்து பொருட்கள் அனைத்தையும், அங்கு அனுப்பி விலையை மாற்ற வேண்டும். இதனால், "விலையை குறைக்க, 75 நாட்கள் அவகாசம் தேவை' என, மருந்துப்பொருட்கள் தயாரிப்போர், மொத்த விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்; இக்கோரிக்கை ஏற்கப்பட்டது.தென் மாவட்டங்களில் மருந்துக்கடைகள், வினியோகஸ்தர்களிடம் உள்ள மருந்துகளை, தயாரிப்பு நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பும் பணி நடந்து வருகிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் லாபத்தை குறைத்ததாலும், மொத்த விற்பனையாளர்களுக்கு, 22 சதவீத லாபம் 8 ஆகவும்; சில்லறை விற்பனையாளர்கள் லாபம், 20 சதவீதத்தில் இருந்து 16 ஆகவும் குறைத்துக் கொண்டன. இதனால், "மருந்துகளின் விலை குறைந்துள்ளன' என, மதுரை மாவட்ட மருந்துப் பொருட்கள் விற்பனை சங்கத்தினர் தெரிவித்தனர்.இதன்படி ரத்த அழுத்தத்திற்கான, 10 மாத்திரைகள் ரூ.40 லிருந்து ரூ.25 ஆகவும்; சர்க்கரை நோய்கான இன்சுலின் மருந்து, ரூ.166 லிருந்து ரூ.120 ஆகவும்; ரேபிஸ் (நாய்க்கடி) தடுப்பு மருந்து, ரூ.317 லிருந்து ரூ.286 க்கும்; அகுமண்டின் என்ற ஆன்டிபயாடிக், ரூ.98 லிருந்து ரூ.65 க்கும் குறையும்.தென் மாவட்டங்களில் அதிகம் பயன்படுத்தப்படும், 199 மருந்து வகைகளின் விலை குறைக்கப்பட்ட, புது பட்டியலையும், மதுரை மாவட்ட மருந்துப் பொருட்கள் வினியோகஸ்தர் சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|