பதிவு செய்த நாள்
01 அக்2013
11:25
புதுடில்லி:பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 3.05 ரூபாய் நேற்று குறைக்கப்பட்டது. அதே நேரத்தில், டீசல் விலை, லிட்டருக்கு, 50 காசுகள் உயர்த்தப்பட்டது. விற்பனை வரி மற்றும் வாட் வரி சேர்த்தால், சென்னையில், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 3.87 ரூபாய் குறையும். டீசல் விலை, 64 காசுகள் அதிகரிக்கும். அத்துடன் வீடுகளுக்கான, மானியமில்லா சமையல் காஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 3 ரூபாய் குறைக்கப்பட்டது. அதன் பின், ஏழு முறை, பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதே அன்றி, குறைக்கப்படவில்லை. இதனால், லிட்டருக்கு, 10.80 ரூபாய் வரை விலை கூடியது. இப்போது, ஐந்து ஆண்டுகளில் மிக அதிகமாகவும், ஐந்து மாதங்களில் முதன் முறையாகவும், நேற்று பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளதால், பெட்ரோல் விலை குறைந்துள்ளது. அதே நேரத்தில், மாதந்தோறும், டீசல் விலையை உயர்த்துவது என்ற கொள்கை அடிப்படையில், நேற்று டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய விலை நிலவரப்படி, சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல், 75.68 (முந்தைய விலை 79.55) ரூபாய்க்கும், டீசல், 56.01 (முந்தைய விலை 55.37) ரூபாய்க்கும் விற்கப்படும். அத்துடன், வீடுகளுக்கு வழங்கப்படும், மானியமில்லா காஸ் சிலிண்டர் விலையும், 14.2 கிலோ எடை கொண்ட, சிலிண்டர் ஒன்றுக்கு, 71.50 ரூபாய் கூடி, 1,004 ரூபாயாக விற்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல் காஸ் இணைப்பு பெற்றுள்ள, ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஆண்டுக்கு, ஒன்பது காஸ் சிலிண்டர்கள், மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதற்கு மேல், சிலிண்டர் வாங்குவோருக்கு, இந்த விலையை கொடுக்க நேரிடும். சென்னையில், இந்த விலை உயர்வு, 68.05 ரூபாயாக இருக்கும். அதாவது, சிலிண்டர் ஒன்றுக்கு, 998.50 (முந்தைய விலை 930) ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|