பதிவு செய்த நாள்
02 அக்2013
00:28
புதுடில்லி:நடப்பு, 2013–14ம் நிதியாண்டில் இதுவரையிலுமாக, நிறுவனங்கள், பங்குகளாக மாறாத கடன்பத்திர வெளியீடுகள் மூலம், சிறிய முதலீட்டாளர்களிடமிருந்து, 4,800 கோடி ரூபாயை திரட்டியுள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தெரிவித்து உள்ளது.நிறுவனங்கள், அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகள் மற்றும் நடைமுறை மூலதனச் செலவிற்காக, பல்வேறு வழிகளில் நிதி திரட்டி கொள்கின்றன.
இலக்கு:தற்போது, பங்குச் சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், பல நிறுவனங்கள், பங்குகளாக மாறாத கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக நிதி திரட்டி கொள்கின்றன.இவ்வகையில், வங்கி சாரா நிதி நிறுவனங்களான, ஸ்ரீ இன்ப்ரா ஸ்ட்ரக்சர் பைனான்ஸ், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் கம்பெனி, ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் (ஆர்.இ.சி.,) மற்றும் முத்துாட் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், இதுவரையிலுமாக, 4,800 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன.இது, இந்நிறுவனங்கள் நிர்ணயித்த இலக்கை விட (1,700 கோடி ரூபாய்) அதிகமாகும்.
மேற்கண்ட நான்கு நிறுவனங்களுள், ஆர்.இ.சி., நிறுவனம், கடன்பத்திர வெளியீடு வாயிலாக, 1,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்நிறுவனம், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, கூடுதலாக, 3,510 கோடி ரூபாயை திரட்டி கொண்டது.
அதே போன்று, ஸ்ரீராம் டிரான்ஸ் போர்ட் பைனான்ஸ் நிறுவனம், 375 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், இந்நிறுவனம், 736 கோடி ரூபாயை திரட்டி கொண்டது.
முத்தூட் பைனான்ஸ் நிறுவனம், கடன்பத்திர வெளியீடு வாயிலாக, 150 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், 324 கோடி ரூபாய் திரட்டி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.ஸ்ரீ இன்ப்ராஸ்டரக்சர் பைனான்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் மற்றும் செப்டம்பர் ஆகிய இரு மாதங்களில், முறையே, 134 கோடி மற்றும் 105 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளது.
ஆர்வம் :இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட முறையே, 75 கோடி ரூபாய் மற்றும் 100 கோடி ரூபாய் அதிகமாகும்.வங்கிகளின் குறித்தகால டெபாசிட்டுகளை விட, நிறுவனங்களின் பங்குகளாக மாறாத கடன்பத்திரங்களுக்கு வழங்கப்படும்(10–12 சதவீதம்) வட்டி விகிதம், அதிகமாக இருப்பதால், முதலீட்டாளர்கள், அவற்றில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த, 2012–13ம் நிதியாண்டில், 15 நிறுவனங்கள், பங்குகளாக மாறாத கடன்பத்திர வெளியீடுகள் வாயிலாக, 17 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டி கொண்டன.இதற்கு முந்தைய நிதியாண்டில் (2011–12), 16 நிறுவனங்கள், மேற்கண்ட வெளியீடுகள் வாயிலாக, 35,611 கோடி ரூபாயை திரட்டி கொண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|