பதிவு செய்த நாள்
02 அக்2013
00:29
நடப்பு 2013–14ம் நிதி ஆண்டின், முதல் காலாண்டில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 5,590 கோடி ரூபாய் அளவிற்கு, அன்னிய நேரடி முதலீடு சார்ந்த பங்கு மூலதனம் குவிந்துள்ளது.கடந்த 2009–2013ம் நிதிஆண்டுகளில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அன்னிய நேரடி முதலீட்டு பங்கு மூலதனம், 18.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, யர்னஸ்ட் அண்டு யங் நிறுவனத்தின் பங்குதாரர் ராஜன் ஏகாம்பரம் தெரிவித்தார்.
வாய்ப்புகள்:சென்னை வர்த்தக கூட்டமைப்பின் (எம்.சி.சி.,) கருத்தரங்கில் அவர் மேலும் கூறியதாவது:அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழகம், யூனியன் பிரதேசமான, புதுச்சேரி ஆகியவை சிறந்து விளங்குகின்றன. பரவலான வர்த்தகம் மற்றும் தொழில் வாய்ப்புகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல அம்சங்கள், அயல்நாட்டு முதலீட்டாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் உள்ளன.இதனால், பல்வேறு துறைகளை சார்ந்த நிறுவனங்களில், அயல்நாட்டு நிறுவனங்கள், பங்கு மூலதனம் மேற்கொள்வது அதிகரித்து வருகிறது.
இதன் விளைவாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த 2012–13ம் நிதியாண்டில், அன்னிய நேரடி முதலீட்டின் கீழ், மேற்கொள்ளப்பட்ட பங்கு மூலதனம் 15,250 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது, முந்தைய 2011–12 மற்றும் 2009–10ம் நிதியாண்டுகளில் முறையே, 6,710 கோடி ரூபாய் மற்றும் 6,120 கோடி ரூபாய் என்ற அளவிற்கு குறைந்து இருந்தது.ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரப்படி, சென்ற 2012–13ம் நிதியாண்டில், தமிழகத்தின், மொத்த உள்நாட்டு உற்பத்தி (டி.ஜி.டீ.பி.,), 72,311 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதிஆண்டில், 63,903 கோடி ரூபாயாக இருந்தது.
வளர்ச்சி:அதே சமயம், இதே காலத்தில், தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின், வளர்ச்சி விகிதம், 7.4 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைந்துள்ளது.கடந்த இருபது ஆண்டுகளாக, தமிழகத்தின் ஒட்டுமொத்த நிகர உள்நாட்டு உற்பத்தியில் (என்.டீ.பி.,), சேவைகள் துறையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து வருகிறது.கடந்த 1992–93ம் நிதிஆண்டில், சேவைகள் துறையின் பங்களிப்பு, 14 சதவீதமாக இருந்தது. இது, சென்ற 2012–13ம் நிதியாண்டில், 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மருத்துவ சுற்றுலா:தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு துறையில், குறிப்பாக, மருத்துவ சுற்றுலாவில், தமிழகம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று உள்ளது.அதே சமயம், மதிப்பீட்டு காலத்தில், நிகர உள்நாட்டு உற்பத்தியில், தொழில் துறையின் பங்களிப்பு, 4 சதவீதம் குறைந்து உள்ளது.கடந்த 2010.11ம் நிதிஆண்டில், டி.ஜி.டீ.பி–ல், வேளாண் துறையின் பங்களிப்பு, 11.9 சதவீதமாக இருந்தது. இது, சென்ற நிதியாண்டில், 10.9 சதவீதமாக சரிவடைந்துள்ளது.அது போன்று, இதே காலத்தில், உற்பத்தி துறையின் பங்களிப்பு, 16.5 சதவீதத்தில் இருந்து, 14.9 சதவீதமாக குறைந்துள்ளது. எனினும், இது, மதிப்பின் அடிப்படையில், 8,395 கோடியில் இருந்து, 9,616 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
தொலைநோக்கு:இதே காலத்தில், மின்சாரம், எரிவாயு மற்றும் குடிநீர் துறைகளின் பங்களிப்பு, 0.36 சதவீதத்தில் இருந்து, 1.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.80'களின் இறுதியில், தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி, 35 சதவீத அளவிற்கு இருந்தது.தமிழகத்தை பொறுத்தவரை,
மின்சாரம், அடிப்படை வசதிகள், ஏற்றுமதி வாய்ப்புகள், தொழிலாளர் பிரச்னைகள் ஆகியவற்றில் அரசு, முக்கிய கவனம் செலுத்த வேண்டும். இவற்றுக்கு, தொழில்துறையினருடன் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும். தமிழக அரசு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை 10.9 சதவீதமாக உயர்த்தும் நோக்குடன், உருவாக்கியுள்ள, 'தொலைநோக்கு பார்வை–2023' திட்டம் வரவேற்க கூடியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|