பதிவு செய்த நாள்
06 அக்2013
01:47
புதுடில்லி:நடப்பு 2013–14ம் நிதிஆண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், கையாளப்பட்ட சரக்கை விட, 2.33 சதவீதம் அதிகரித்து, 27.69 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளன.
அதிகரிப்பு:உள்நாட்டில், மிகப் பெரிய அளவில், 13 துறைமுகங்கள் உள்ளன. இத்துறைமுகங்கள் கடந்த 2012–13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், கையாண்ட சரக்கின் அளவு, 27.06 கோடி டன்னாக இருந்தது.மேற்கண்ட மொத்த துறைமுகங்களில், 8 துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு, கடந்தநிதியாண்டின் இதே காலாண்டை விட அதிகரித்தும், 5 துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு குறைந்தும் உள்ளன.
நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்களில், கோல்கட்டா டாக் சிஸ்டம்ஸ் மற்றும் ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் ஆகிய இரண்டு துறைமுகங்கள் கையாண்டசரக்கின் அளவு, கணக்கீட்டு காலத்தில், 5.74 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.98 கோடி டன்னிலிருந்து, 2.09 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.
இவற்றுள், கோல்கட்டா டாக் சிஸ்ம்ஸ் கையாண்ட சரக்கின் அளவு, 5.30 சதவீதம் அதிகரித்து, 57.54 லட்சம் டன்னிலிருந்து, 60.59 லட்சம் டன்னாகவும், ஹால்டியா டாக் காம்ப்ளக்சின் சரக்கின் அளவு, 5.91 சதவீதம் உயர்ந்து, 1.41 கோடி டன்னிலிருந்து, 1.49 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளன.
கணக்கீட்டு காலத்தில், பரதீப் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 33.13 சதவீதம் அதிகரித்து, 2.56 கோடி டன்னிலிருந்து, 3.41 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
சென்னை துறைமுகம்:அதேசமயம், விசாகப்பட்டினம் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 4.53 சதவீதம் குறைந்து, 3.03 கோடி டன்னில்இருந்து, 2.89 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.
தமிழகத்தில், மூன்று மிகப் பெரிய துறைமுகங்கள் உள்ளன. இவற்றுள், நிறுவன அளவில் செயல்பட்டு வரும், எண்ணுார் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, கணக்கீட்டு காலத்தில், மிகவும் அதிகபட்சமாக, 58.51 சதவீதம் வளர்ச்சி கண்டு, 79.97 லட்சம் டன்னிலிருந்து, 1.27 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், சென்னை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 3.24 சதவீதம் குறைந்து, 2.71 கோடி டன்னிலிருந்து, 2.62 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.
கொச்சி துறைமுகம்:வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கையாண்ட சரக்கு, 0.40 சதவீதம் உயர்ந்து, 140.37 லட்சம் டன்னிலிருந்து, 140.93 லட்சம் டன்னாக சற்றே அதிகரித்துள்ளது.கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 7.07 சதவீதம் உயர்ந்து, 101.34 லட்சம் டன்னிலிருந்து, 108.50 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.புதிய மங்களூர் துறைமுகம் கையாண்ட சரக்கு, 15.77 சதவீதம் அதிகரித்து, 1.67 கோடி டன்னிலிருந்து, 1.94 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
மர்மகோவா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 59.24 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1.27 கோடி டன்னிலிருந்து, 51.59 லட்சம் டன்னாக மிகவும் சரிவடைந்துள்ளது.மும்பை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 4.19 சதவீதம் குறைந்து, 2.88 கோடி டன்னிலிருந்து, 2.76 கோடி டன்னாகவும், ஜே.என்.பி.டி., கையாண்ட சரக்கின் அளவு, 5.26 சதவீதம் சரிவடைந்து, 3.27 கோடி டன்னிலிருந்து, 3.09 கோடி டன்னாகவும் குறைந்துள்ளன.
கண்ட்லா:கண்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 2.83 சதவீதம் அதிகரித்து, 4.47 கோடி டன்னிலிருந்து, 4.60 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி
விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|