பதிவு செய்த நாள்
07 அக்2013
10:59
சென்னை::தமிழக அரசு சார்பில், மத்திய அரசு ஜவுளித் துறையின் கீழ் செயல்படும், ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையங்களில், 9,000 பேருக்கு, வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பம் உள்ளோர் சேர்ந்து பயன்பெறலாம்.தமிழகத்தில் உள்ள, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு, வேலைவாய்ப்பு அளிப்பதற்காக, அவர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, முதல்வர் முடிவு செய்தார்.
அதன்படி, நடப்பாண்டு, 2.24 லட்சம் பேருக்கு, வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்நிதி, நான்கு கட்டமாக ஒதுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.முதல் கட்டமாக, 21.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், கைத்தறித் துறைக்கு, 4.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில், 9,000 பேருக்கு, ஆயத்த ஆடை பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. பயிற்சி அளிக்கும் பொறுப்பு, மத்திய அரசு ஜவுளித் துறையின் கீழ் செயல்படும், ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இம்மையத்திற்கு, தமிழகத்தில், சென்னை, கிண்டி, எழும்பூர்; காஞ்சிபுரம், உத்திரமேரூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சூளகிரி, வேலூர், கடலூர், தர்மபுரி, பெரம்பலூர், பரமக்குடி, ஈரோடு, சேலம், அரியலூர், மதுரை, சிவகங்கை ஆகிய இடங்களில், கிளைகள் உள்ளன.
இம்மையங்களில், தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் ஜவுளித் துறை சார்பில், 9,000 பேருக்கு, தையல் இயக்குதல் (ஆரம்ப நிலை), தர நிர்ணயம் செய்தல், தையல் கலை பூ வேலைப்பாடு போன்றவற்றில், 30 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
ஒவ்வொரு மாதமும், முதல் வாரத்தில், பயிற்சி துவங்கும். பயிற்சி கட்டணத்தை, தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறது. பாடப் புத்தகங்கள், உபகரணங்கள், இலவசமாக வழங்கப்படும்.
போக்குவரத்திற்கும், சிற்றுண்டிக்கும், தினம், 75 ரூபாய் வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும், அரசு சான்றிதழ் வழங்கப்படும். தேவைக்கேற்ப, ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில், வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். எனவே, விருப்பம் உள்ள, 35 வயதிற்குட்பட்ட, ஐந்தாம் வகுப்புக்கு மேல் படித்தவர்கள், அருகில் உள்ள, ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தை அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு, www.atdcindia.co.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். அல்லது 044-4265 6157, 2250 0121, 0421-2232614, ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என, ஆயத்த ஆடை பயிற்சி மையம் மற்றும் வடிவமைப்பு மையம், தெற்கு மண்டல மேலாளர் நாகராஜன் தெரிவித்தார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|