பதிவு செய்த நாள்
07 அக்2013
11:03
பொள்ளாச்சி :பொள்ளாச்சி உழவர் சந்தையில் செப்., மாதத்தில் ஒரு கோடியே 44 லட்சத்து
98 ஆயிரத்து 60 ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாயின. காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்ததால், விலை குறைந்து விற்பனையானது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பொள்ளாச்சி நகராட்சி கட்டடத்துக்கு அருகே, உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில், 160 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். கோமங்கலம்புதூர், சோமந்துரை சித்தூர், கானல்புதூர், வடக்கிப்பாளையம் உள்ளிட்ட பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. தினந்தோறும் 80 மேற்பட்ட விவசாயிகளும், 2,500க்கு மேற்பட்ட பொதுமக்களும் இதை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மழை நன்றாக பெய்ததால், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் காய்கறி சாகுபடியில் இறங்கினர். தற்போது விளைச்சலாகும் காய்கறிகள், உழவர் சந்தைக்கு வரத்துவங்கியள்ளன. நாள்தோறும் காய்கறி வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆக., விட, செப்., மாதத்தில் காய்கறி வரத்து அதிகமாகி விலை குறைவாக விற்பனையானது. முக்கியமாக, கிலோவிற்கு கத்திரி 44 ல் இருந்து 24 ரூபாய்; பச்சை மிளகாய் சம்பா 34ல் இருந்து 16 ரூபாய்; குண்டு மிளகாய் 40ல் இருந்து 18 ரூபாய்; பெரிய வெங்காயம் 50 ல் இருந்து 38 ரூபாய்; பீட்ரூட் 20ல் இருந்து 14 ரூபாய்; முள்ளங்கி 20ல் இருந்து 10 ரூபாய்; சுரக்காய் 14ல் இருந்து எட்டு ரூபாய் என, அதிரடியாக விலை குறைந்து விற்பனையாகின.
கடந்த இரண்டு மாதங்களிலும் காலிப்பிளவர் 28 ரூபாய், இஞ்சி 80 ரூபாய், உருளை 20 ரூபாய், வாழைக்காய் 24 ரூபாய், பாகற்காய் 30 ரூபாய் என, எந்தவித மாற்றமும் இல்லாமல்
விற்கப்பட்டன. மேலும், பீன்ஸ், பூசணி, சேனைக்கிழங்கு, முருங்கைகாய், அவரை, பீர்க்கங்காய் மற்றும் தக்காளி போன்றவை அதிகளவில் எந்தவித மாற்றம் இல்லாமல் இரண்டு முதல் ஐந்து ரூபாய் விலை வித்தியாசத்தில் விற்பனையாகின.
கடந்த செப்., மாதத்தில் 5 லட்சத்து 64 ஆயிரத்து 290 கிலோ காய்கறி வரத்து இருந்தது. நாளொன்றுக்கு 80 பேர் வீதம் 2,411 விவசாயிகள் காய்கறி விற்பனைக்காக வந்து இருந்தனர். 94 ஆயிரத்து 49 வாடிக்கையாளர்கள், உழவர் சந்தையை பயன்படுத்தி இருந்தனர்.
கடந்த மாதத்தில் உழவர் சந்தையில் ஒரு கோடியே 44 லட்சத்து 98 ஆயிரத்து 60 ரூபாய்க்கு வர்த்தகம் இருந்தது. இது, ஆக., மாதத்தை விட 85 ஆயிரத்து 900 ரூபாய் கூடுதலாகும்.
இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், "கடந்த ஆக., மாதத்தில் கேரளத்தில் ஓணம் பண்டிகையொட்டி காய் விலை உச்சத்தில் இருந்தது. செப்., மாதத்தில் சந்தைக்கு காய்
கறிகளின் வரத்து அதிகமாக இருந்ததால், அனைத்து காய்கறிகளின் விலையும் குறைந்து காணப்பட்டது. அதனால், வாடிக்கையாளர்களின் வரத்தும், விற்பனையும் அதிகமாக இருந்தது. இந்த மாதத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது'' என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|