பதிவு செய்த நாள்
10 அக்2013
01:23
புதுடில்லி:பண்டிகை காலத்தை முன்னிட்டு, வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு, பல்வேறுகடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றன.
இதனால் வாகனம், "டிவி', பிரிஜ் உள்ளிட்டவற்றுக்கான கடன்களை, குறைந்த வட்டியில் பெறலாம்.கடந்த வாரம், மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம், பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோர் சாதனங்களுக்கான கடன்களை வங்கிகள் குறைக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.
தொழில் துறை:இதற்காக, நடப்பு நிதிஆண்டில், வங்கிகளுக்கு, மத்தியஅரசு பங்கு மூலதனமாக வழங்க நிர்ணயித்துள்ள, 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான, வரம்புத் தொகை உயர்த்தப்படும் என, அவர் தெரிவித்தார்.நாட்டில் நுகர்வோர் சாதனங்களுக்கான தேவையை அதிகரித்து,தொழில் துறையின் மந்தநிலையை போக்கும் நோக்குடன், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும், அவர் கூறினார்.இந்நிலையில், கடந்த திங்கள்அன்று, வங்கிகள் பெறும் அன்றாடக் கடனுக்கான வட்டியை, 9.50 சதவீதத்தில் இருந்து, 9 சதவீதமாக, ரிசர்வ் வங்கி குறைத்தது.
ஏற்கனவே, 10.25 சதவீதமாக இருந்த இந்த வட்டி விகிதம், கடந்த மாத இறுதியில், 0.75 சதவீதம் குறைக்கப்பட்டு, 9.50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுஇருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.வங்கித் துறையில், நிதிப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்குடன், மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கைகள் மூலம், வங்கிகள் பெறும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி, 1.25 சதவீதம் குறைந்துள்ளது.
நேற்று முன்தினம், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், 7 14 நாட்கள் வரையிலான கடன்களுக்கு, வாரந்தோறும், வெள்ளியன்று, குறிப்பிட்ட வட்டியில் வங்கிகள் கடன் பெறலாம் என, தெரிவிக்கப்பட்டது.
பணப்புழக்கம்:மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும்இணைந்து எடுத்துள்ள இத்தகைய நடவடிக்கைகளால், வங்கித் துறையில் பணப்புழக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.இதையடுத்து, பல வங்கிகள், உடனடியாக நுகர்வோர் Œாதன கடனுக்கான வட்டியை குறைத்து உள்ளன.
பொதுத் துறை வங்கிகளில், முதலிடத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கார் கடனுக்கான வட்டியை, 0.20 சதவீதம் குறைத்து, 10.55 சதவீதமாக நிர்ணயித்து உள்ளது. மேலும், கடனுக்கான பரிசீலனைக் கட்டணத்தை, 500 ரூபாயாக குறைத்து நிர்ணயித்து உள்ளது.
முன்பு இது,கடன் தொகையில், 0.51 சதவீதம் (குறைந்தபட்சம் 1,020 ரூபாய்) என்ற அளவில் இருந்தது.
மேலும்,வங்கியில், ஊதியக் கணக்கு வைத்துள்ளோர் பெறும்,டூ வீலர்,நுகர்வோர் சாதனங்கள்ஆகியவற்றின் கடனுக்கான வட்டிச் சலுகை, 12.05 சதவீதத்தில் இருந்து துவங்கும் எனவும், இவ்வங்கி அறிவித்து உள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த,ஐ.டீ.பீ.ஐ. பேங்க், பண்டிகைகாலத்தை முன்னிட்டு, மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடு வாங்க, 10.25 சதவீத, அடிப்படை வட்டி விகிதத்தில்,கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு,வழங்கப்படும் கடனுக்கு பரிசீலனை கட்டண விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் பேங்க்:பஞ்சாப் நேஷனல் வங்கியும், பல்வேறு கடன்களுக்கு, 2.50 சதவீதம் வரை வட்டி குறைப்பு செய்துள்ளது.இவ்வங்கி, கார் கடனுக்கான வட்டி விகிதத்தை, 10.65சதவீதமாகவும், டூ வீலர் கடனுக்கான வட்டியை, 12.20 சதவீதமாகவும், தனிநபர் மற்றும் நுகர்வோர் Œாதன கடனுக்கான வட்டியை, 12.75 சதவீதமாகவும் குறைத்துள்ளது.
மேலும் இவ்வங்கி, கார் வாங்க (கடை விலையில்) 100 சதவீத கடன் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், ஆட்டோ, டாக்சி போன்ற வர்த்தக வாகன கடன்களுக்கானவட்டியை, 0.25 சதவீதம் குறைத்து, 12.50 சதவீதமாக நிர்ணயித்து உள்ளது.மேலும், தனிநபர், நுகர்வோர் சாதன கடன்களுக்கான வட்டியை, 0.25 சதவீதம் குறைத்து, அரசு ஊழியர்களுக்கு, 12.50 சதவீதமாகவும், மற்றவர்களுக்கு, 13.50 சதவீதமாகவும் நிர்ணயித்து உள்ளது.
வரும், 2014ம் ஆண்டு, ஜனவரி, 31ம் தேதி வரை, கார், டூ வீலர் மற்றும் நுகர்வோர் சாதனங்களுக்கான பண்டிகை கால கடன் சலுகை திட்டம் அமலில் இருக்கும் என, மேற்கண்ட வங்கிகள் தெரிவித்து உள்ளன.
இந்தியன் பேங்க்:இந்தியன் வங்கி, பண்டிகை காலத்தை முன்னிட்டு, சிறப்பு கூட்டுக் கடன் திட்டத்தை றிவித்துள்ளது. இதன்படி, வீட்டு வசதிக் கடனுக்கு, வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும், வீட்டு வசதி கடன்பெறுவோர் வாங்கும், வாகனம், நுகர்வோர் சாதன கடனுக்கு, சலுகை அடிப்படையில், 10.20 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன், அனைத்து சில்லரை கடன்களுக்கான பரிசீலனைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வங்கி தெரிவித்து உள்ளது.
வரும் நாட்களில், மேலும் பல வங்கிகள், கவர்ச்சிகரமானவட்டி குறைப்பு அறிவிப்புகளை வெளியிடும் என, எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|