பதிவு செய்த நாள்
16 அக்2013
14:32
'டாஸ்மாக்' நிறுவனம், சென்னையில் உள்ள, அல்சா மாலில், நவீன மதுபான கடையை திறந்துள்ளது. தமிழகத்தில், 6,800க்கும் மேற்பட்ட, டாஸ்மாக் கடைகளில், மது வகைகள் மற்றும் பீர் வகைகள் விற்கப்படுகின்றன. உள்நாட்டு மதுபான நிறுவனங்கள், இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து, பிரிமியம் ரக சிறப்பு மது வகைகளை இறக்குமதி செய்து, டாஸ்மாக் நிறுவனத்துக்கு வினியோகம் செய்கின்றன. இந்த மது வகைகள், டாஸ்மாக் மூலம், அதன் சில்லரை கடைகளில், மற்ற மது வகையை விட, சற்று, கூடுதல் விலையில் விற்பனை செய்கிறது.
டாஸ்மாக் கடைகளில், எப்போதும் கூட்டம் நிரம்பி காணப்படுவதால், வசதி படைத்தவர்கள், தனிமையில் மது அருந்த விரும்புவோர், கடைகளுக்கு சென்று, மது வகைகள் வாங்க சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களின் வசதிக்காக, 'ஷாப்பிங் மால்'களில், பார் வசதி இல்லாமல், மதுபான கடைகள் திறக்க, டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்தது. முதற்கட்டமாக, சென்னை எழும்பூரில் உள்ள, 'அல்சா மால்'லில், டாஸ்மாக் கடை (எண்.441) திறக்கப்பட்டுள்ளது. இங்கு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செயப்பட்ட, மது வகை மற்றும் பிரிமியம் ரகம் உள்ளிட்ட, சிறப்பு மது வகைகள் விற்கப்படுகின்றன.
இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறுகையில், 'ஷாப்பிங் மால்களில் திறக்கப்படும் கடைகளில், 1,000 ரூபாய்க்கு மேற்பட்ட, பிரிமியம் ரக மதுபானங்கள் மட்டும் விற்கப்படும். விரைவில், பெரும்பாலான மால்களில் கடைகள் விரிவுபடுத்தப்படும்' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|