பதிவு செய்த நாள்
17 அக்2013
16:59
மிகச் சிறிய கார், மிகவும் எடைக் குறைவான கார், அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டது, முழுக்க மின்சாரத்திலேயே ஓடக் கூடியது, என்று ஏதாவது ஒரு முக்கிய விஷயத்தை மையப்படுத்தி, பல முன்னணி கார் நிறுவனங்களும், ஒரு காரை வடிவமைக்கும். தங்களின் பொறியியல் தொழில்நுட்பம், இத்துறையில் தங்களுக்குள்ள அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் தயாரிக்கும் இவ்வகை கார்களே, கான்செப்ட் கார்கள் என்றழைக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் தங்களின் கனவுக்காரை, உலகளவிலோ தேச அளவிலோ நடக்கும் வாகன கண்காட்சியில், முதலில் பார்வைக்கு வைப்பார்கள். வாகன ஆர்வலர்கள், தொழில்
நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள், மற்ற சிறப்பு வாகன உற்பத்தியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊடகங்கள் கலந்து கொள்ளும், இவ்விழாவில் பலதரப்பட்ட கருத்துகள், தங்களின் கார் குறித்து, வாகன நிறுவனங்களுக்கு கிடைக்கும். அதன் அடிப்படையில் மாற்றங்களை செய்யப்பட்டோ அல்லது மேம்படுத்தப்பட்டோ அக்கார்கள் வணிக விற்பனைக்காக உற்பத்தி செய்யப்படும்.
நடைமுறை சாத்தியம் இல்லாத மாடல்களாக இருந்தாலோ அல்லது வணிக ரீதியான லாபம் கிடைக்கப்பெறாது என்று தெரிந்தாலோ அதன் உற்பத்தி துவங்கப்படாமலே போய் விடவும் வாய்ப்புண்டு. இது தான், கான்செப்ட் கார்களின் சரித்திரம். தற்போதைய சில ஆண்டுகளில் முன்னணி கார் நிறுவனங்களின், கான்செப்ட் கார்களின் பட்டியலில் சில இதோ உங்கள் பார்வைக்கு...
பியட் மையோ...: இத்தாலிய வாகன உற்பத்தி நிறுவனமாக பியட், இந்தியாவில் தங்களின் கான்செப்ட் காரான பியட் மையோவை, அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட, 10 ஆயிரம் வடிவமைப்பாளர்களின் கருத்துகளை பெற்று, பார்ப்போரை வியக்க வைக்கும், சயின்ஸ் பிக்ஷன் கதைகளில் வருவது போன்று, தோற்றத்தில் இக்கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளித்தோற்றம் கவர்ச்சியாக இருப்பது மட்டுமின்றி, உட்புற வடிவமைப்பும் அசத்தும், பல நவீன மற்றும் சொகுசு அம்சங்களுடன் உள்ளது.
மாருதி சுசுகி ஆர் 3: மாருதி சுசுகி தங்களின் கச்சித எம்.பி.வி.,யான மாருதி ஆர் 3 மாடலை 10 வது ஆட்டோ எக்ஸ்போவில், டில்லியில் 2010 ஜனவரியில் அறிமுகப்படுத்தியது. இது, அடுத்த தலைமுறை எம்.பி.வி.,யாக இந்திய இளம் வாகனப்பொறியாளர் குழுவினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு கம்பீரமாகவும், முரட்டுத்தனமாகவும் செடானின் சொகுசு அம்சங்களுடன் உள்ளது. இதன் முக்கிய கருத்து, "டுகெதர்னெஸ்' ஒன்றுபடுவோம் என்பதாகும். போதுமான இடவசதியுடன், பெரிய குடும்பங்களின் பயணத்திற்கு ஏற்ப, இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆர் 3யில் 1372 சி.சி., கே.14 பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அதிகபட்சமாகவும், 110 என்.எம் டார்க்கை, 3,000 ஆர்.பி.எம்.,மிலும் 95 பி.எல்.பி., பவரை 6,000 ஆர்.பி.எம்.,மிலும் வழங்கும்படி உள்ளதாகவும் தெரிகிறது.
ஹுண்டாய் ஏ.சி.டி., 14: அற்புதமான வடிவமைப்பில் இருக்கும் இந்த பெரிய நான்கு கதவுகள் கொண்ட கூபே, ஹுண்டாய் கார்களுக்கே உரித்தான ஸ்டைலில் இருக்கிறது. பி.பில்லர் என்றழைக்கப்படும் இரண்டு கதவுகளுக்கிடையேயான, தூண்கள் இதில் இல்லாமல் இருப்பது, கவர்ச்சியாய் உள்ளது. இந்த கார், 2013 டெட்ராய்டு ஆட்டோ ஷோவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
நிசான் ரெசோனென்ஸ்: இந்த க்ராஸ் ஓவர் மாடல், பார்ப்பதற்கு மிகவும் எடுப்பாகவும், கம்பீரமாகவும் தெரிகிறது. நிசானின் எஸ்.யு.வி.,க்கள் இனி பின்னாளில் இப்படி இருக்கலாம் என்பதற்கு ஏற்ப, வடிவமைக்கப்பட்டுள்ளது ரெசோனென்ஸ். இதில், ஹைப்ரிட் பவர் ட்ரெயின் உள்ளது. வருங்காலத்தில் ஹைட்ரஜன் எரிபொருள் உபயோகிப்பதற்காக, இதன் டேஷ்போர்ட் ஹோலோகிராபிக் டேஷ் போர்டிற்காக என்பதாகவும் இருக்கலாம். இது, 2013 டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் இடம் பெற்றது.
ஜி.ஏ.சி., குரூப்பின் இஜெட்: 2013 டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில், சீனாவின் வாகன உற்பத்தியாளரான ஜி.ஏ.சி., குரூப் இஜெட் என்ற முழு மின்சார ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜெர்மானிய ஜாம்பவான்களுக்கு இடையில், இப்படி ஒரு மாடலை, அறிமுகப்படுத்தியுள்ள இந்த நிறுவனம், சீன வாகன சந்தையின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. சிறந்த தொழில் நுட்பங்கள், ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் முக்கியமான சக்தி சேமிப்பு கான்செப்டை கொண்டுள்ளது இம்மாடல். தரமான தயாரிப்பாக வெளிவந்தால், இந்த மாடல் சிறந்த வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்சிக்கு டாடா பிக்சல்: ஆட்டோ எக்ஸ்போ, 2012 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இக்கார், 2014ம் ஆண்டு, விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அழகாய், குட்டியாய், அடக்கமாய் இருக்கும் இக்காரின் கதவுகள், பார்ப்பவரை பிரமிக்க வைப்பதாய் உள்ளது. கத்திரி கதவுகள் (சிசர் டோர்) என்றழைக்கப்படும், இக்கதவுகள் மேற்புறமாக சரிந்து மேலேற பயணிகள் எப்படிப்பட்ட இடுக்கான சூழலிலும், காருக்குள் ஏறவும், இறங்கவும் முடியும். இப்புதிய டாடா பிக்சல், 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்ட் டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. ஸ்டாப் ஸ்டார்ட் தொழில்நுட்பம் போன்ற, நவீன தொழில் நுட்பத்தை கொண்டுள்ள
இக்கார், விற்பனைக்கு வரும் நாளை இந்திய வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்தக் கொண்டுள்ளனர் என்றே சொல்லவேண்டும். கனவு மெய்ப்பட வேண்டும். கான்செப்ட் கார் விற்பனைக்கு வரவேண்டும் என்பதே ஆட்டோ ஷோவில் கலந்து கொள்வோர் மற்றும் கார் ஆர்வலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாகும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|