பதிவு செய்த நாள்
18 அக்2013
03:03
கச்சா எண்ணெய்க்கான தொகையை, ரூபாயில் தான் தர முடியும்; மறுத்தால், ஒரு வாடிக்கையாளரை இழக்க நேரிடும் என, மத்திய அரசு, ஈரானிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.அணு ஆயுத தயாரிப்பு தொடர்பாக, ஈரான் மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
அமெரிக்க டாலர்:இதனால், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்வதை, இந்தியா குறைத்துக் கொண்டது.மேலும், கடந்த 2011ம் ஆண்டு ஜூலை முதல், கச்சா எண்ணெய்க்கான தொகையை, அமெரிக்க டாலரில் வழங்காமல், யூரோவில் வழங்கி வந்தது.இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள், நடப்பாண்டு பிப்ரவரி வரை, ஈரானில் இருந்து இறக்குமதியான கச்சா எண்ணெய்க்கு, துருக்கியின் அல்க்பேங்க் மூலம், யூரோ கரன்சியை செலுத்தி வந்தன.
இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, கடுமையாக வீழ்ச்சி காண துவங்கியது.இதையடுத்து, இறக்குமதியாகும் கச்சா எண்ணெய்க்கான தொகையை, இந்திய ரூபாயில் வழங்க, மத்திய அரசு முன்வந்தது. அதே சமயம், இந்தியாவில் இருந்து ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான தொகையை, ரூபாயில் பெற்றுக் கொள்ளவும், சம்மதம் தெரிவித்தது.இந்தியாவில் இருந்து, அரிசி, பயிறு வகைகள், மருந்துகள், வாகன உதிரி பாகங்கள், இயந்திர உபகரணங்கள், உருக்கு உள்ளிட்ட பொருட்கள், ஈரானுக்கு ஏற்றுமதி ஆகின்றன.
மேற்கண்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு, அமெரிக்காவின் பொருளாதார தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது.ஈரான், கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம், பெறும் ரூபாயை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளும் பொருட்களுக்கு ரூபாயாகவே வழங்க முடியும்.இதனால், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் ஏற்படும் பாதிப்பில் இருந்து, இந்திய இறக்குமதியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வழி ஏற்படும்.
55 சதவீதம்:இந்த திட்டத்தை, ஈரானின் முந்தைய அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும், இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான தொகையில், 55 சதவீதத்தை இந்திய ரூபாயிலும், 45 சதவீதத்தை, யூரோவிலும் பெற்றுக் கொள்ள ஈரான் முன்வந்தது.
இதையடுத்து, கோல்கட்டாவை சேர்ந்த யூகோ பேங்க் மூலம், ஈரான் தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கு, கச்சா எண்ணெய்க்கான தொகையில், 55 சதவீதம், ரூபாயாகவே வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை, 100 சதவீதம் ரூபாயாகவே பெற்றுக் கொள்ளுமாறு, மத்திய அரசு, ஈரானை வலியுறுத்தியுள்ளது. ஆனால், ஈரானில், அசன் ருஹானி தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு, இத்திட்டத்தை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டி வருகிறது.
இதுகுறித்து, மத்திய வர்த்தக துறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:கச்சா எண்ணெய்க்கான தொகை முழுவதையும், ரூபாயில் பெற்றுக் கொள்ளுமாறு, ஈரானிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது குறித்து, ஈரான் பரிசீலித்து வருகிறது.அவர்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை. இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், மாற்று திட்டம் மூலம் கச்சா எண்ணெய்க்கான தேவையை, இந்தியா பூர்த்தி செய்து கொள்ளும் என, திட்டவட்டமாக தெரிவித்து விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.ஈரானின் முடிவைப் பொறுத்தே, இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார தடை:வெனிசுலா உள்ளிட்ட இதர நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்து கொள்ள, இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக, கடந்த 2011-12ம் நிதியாண்டில், ஈரானில் இருந்து, 1.74 கோடி டன் என்ற அளவிற்கே, கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்தது.இது, கடந்த 2012-13ம் நிதியாண்டில், 1.33 கோடி டன்னாக குறைந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|