பதிவு செய்த நாள்
24 அக்2013
00:48
சேலம்:தீபாவளி பண்டிகைக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், வியாபாரிகள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து செயல்படுவதால், உளுந்தம் பருப்பின் விலை, ஒரே வாரத்தில் குவிண்டாலுக்கு, 600 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது.தமிழகத்துக்கு தேவையான உளுந்து, உளுந்தம் பருப்பு, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து வருகிறது.
மழை பொழிவு:பர்மாவில் இருந்தும் கப்பல்மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, தமிழகத்தின் பிற நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.கடந்த ஆண்டு, தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுமழை இல்லாததால், உள்நாடு மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும், உளுந்தம் பருப்பை எதிர்பார்க்க வேண்டிய நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டனர்.
கடந்த மாதம் வரை, வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வாரம், 25 லோடு வரை, உளுந்தம் பருப்பு விற்பனைக்கு வந்து கொண்டு இருந்தது.தீபாவளி பண்டிகைக்கு இன்னும், பத்து நாட்களே உள்ள நிலையில், அவற்றின் வரத்தில் திடீர் சரிவு ஏற்பட்டு உள்ளது. தற்போது வாரத்துக்கு, ஏழு லாரிகளில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. அது மட்டுமின்றி பர்மா ரக உளுந்தம் பருப்பை விற்பனைக்கு கொண்டு வரும் வியாபாரிகள், விலை உயர்வை எதிர்பார்த்து, அவற்றை கிடங்குகளில் பதுக்கி வைத்துள்ளனர்.
மொத்த விற்பனை:சந்தையில், உளுந்தம் பருப்பு வரத்து குறைந்ததை அடுத்து, கடந்த வாரம் குவிண்டாலுக்கு, 400 ரூபாய் வரை, விலை உயர்ந்தது. நேற்று மேலும், 200 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.மொத்த விற்பனையில், அக்டோபர் முதல் வாரத்தில், ஒரு குவிண்டால், முதல் ரக உளுந்தம் பருப்பு, 6,600 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 6,100 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம், 5,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரம், ஒரு குவிண்டால் உளுந்தம் பருப்பு, முதல் ரகம் , 7,000 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் குவிண்டால், 6,400 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம் குவிண்டால், 6,100 ரூபாய்க்கும் விற்பனைஆனது.
வட மாநிலங்கள்:இது, தற்போது, மேலும், குவிண்டாலுக்கு, 200 ரூபாய் அதிகரித்து, முதல் ரகம், 7,200 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 6,600 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம், 6,300 ரூபாய்க்கும் விற்பனையானது.வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு விற்பனைக்கு வந்து கொண்டு இருந்த உளுந்தம் பருப்பு வரத்தில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், மொத்த வியாபாரிகள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து, உளுந்தம் பருப்பை பதுக்கி வருவதால், விலை, மேலும் உயரும் என, தெரிகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|