பதிவு செய்த நாள்
24 அக்2013
00:54
கம்பம்:கேரள அதிகாரிகளால், நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில், தமிழக ஏலக்காய் விவசாயிகள் உள்ளனர்.
இந்திய ஏலக்காய் சாகுபடியில், கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. நாட்டின் மொத்த ஏலக்காய் சாகுபடியில், 80 சதவீதம், இடுக்கி மாவட்டத்தில் (1.5 லட்சம் ஏக்கர்) மேற்கொள்ளப்படுகிறது.
தேனி மாவட்டம்:ஏலக்காய் தோட்டங்களில், 70 சதவீதம் தேனி மாவட்ட விவசாயிகளிடம் உள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் ஏலக்காய், நறுமண பொருள்கள் வாரியத்தின் ஏல மையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.இந்த விற்பனையில் கலந்து கொண்டு, கொள்முதல் செய்வதும் தமிழக வியாபாரிகளேயாகும். போடி, தேவாரம், விருதுநகர், கம்பம் பகுதிகளைச் சேர்ந்தவர்களே, வியாபாரம் செய்கின்றனர்.
கடந்த ஆண்டு, முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், கேரளாவிற்கு எதிரான போக்கு, தேனிமாவட்டத்தில் எதிரொலித்தது.அப்போதிருந்தே, இடுக்கி மாவட்டத்தில், தமிழர்களுக்கு எதிரான போக்கு நிலவுகிறது. அங்குள்ள அரசியல்வாதிகள் அதை பெரிதாக்கி வருகின்றனர்.
கொள்முதல்:இங்குள்ள தோட்டங்களில் சாகுபடி செய்வதும் தமிழர்கள், ஏலக்காய் கொள்முதல் செய்வதும் தமிழர்கள், தொழிலாளர்களும் தமிழர்கள் என்பதால், ஒருவித வெறுப்பு ஏற்பட்டுள்ளது. கம்பம் பகுதியில் இருந்து, ஏலக்காய் தோட்டங்களுக்கு தினந்தோறும், 1,000 ஜீப்புகளில், தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.
கடந்த வாரம் திடீரென, நெடுங்கண்டம் பகுதியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ஜீப்புகளுக்கு, டூரிஸ்ட் பெர்மிட் வாங்க வேண்டும், என்று வலியுறுத்தி நடவடிக்கை எடுத்தனர். இதனால், ஜீப் வைத்திருப்பவர்கள், கேரளாவிற்கு செல்லாமல் இருந்தனர். ஏலக்காய் விவசாயிகள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.இருந்தாலும், ஒரு மாதத்திற்குள் டூரிஸ்ட் பெர்மிட் எடுக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில், ஜீப்புகளை அனுமதிக்க முடியாது என்றும், கூறியுள்ளனர்.
ஆனால், டூரிஸ்ட் பெர்மிட் எடுத்தால் ஜீப்புகளை இயக்க முடியாது என்றும், ஜீப் உரிமையாளர்கள் கூறுகின்றனர். வரி, மிக அதிகமாக இருக்கும் என்றும், அதனால் இழப்பு ஏற்படும் எனவும் அவர்கள், கூறுகின்றனர்.
கோரிக்கை:இதுவரை இல்லாத வழக்கமாக, தற்போதுதிடீரென கேரள அதிகாரிகள், டூரிஸ்ட் பெர்மிட் எடுக்க சொல்ல காரணம் என்ன, என்று கேள்வி எழுப்புகின்றனர். தங்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும், என்பதுதான் கேரள அதிகாரிகளின் திட்டம் என்று, ஏல விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.தமிழக அரசு இந்த விஷயத்தில் கேரள அரசுடன் பேசி, சுமுக தீர்வு காண வேண்டும் என, ஏலக்காய் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|