பதிவு செய்த நாள்
25 அக்2013
01:02
மும்பை:நடப்பு 2013 – 14ம் நிதிஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, ஆறு மாத காலத்தில், உள்நாட்டில் உள்ள முன்பேர சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், 65.59 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
பொருளாதார மந்தநிலை:இது, இதற்கு முந்தைய நிதிஆண்டின், இதே காலத்தில்
மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை (87.63 லட்சம் கோடி ரூபாய்) விட, 25.16 சதவீதம் குறைவு என, பார்வர்டு மார்கெட்ஸ் கமிஷன் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொருளாதார மந்த நிலையால், வேளாண் விளைபொருட்கள், தங்கம், வெள்ளி, எரிசக்தி உள்ளிட்ட, பல்வேறு பொருட்கள் மீதான முன்பேர வர்த்தகம் சரிவடைந்துள்ளது.சென்ற செப்டம்பர் மாதம், 30ம் தேதி வரையிலான, 15 தினங்களில், முன்பேர சந்தைகளில்
மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், கடந்தாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட
வர்த்தகத்தை விட, 55.13 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 7.33 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 3.29 லட்சம் கோடி ரூபாயாக மிகவும் சரிவடைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், விளை பொருட்கள் மீதான வர்த்தகம், 37.16 சதவீதம் சரிவடைந்து, 11.89 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 7.47 லட்சம் கோடி
ரூபாயாக குறைந்துள்ளது.தங்கம், வெள்ளி உள்ளிட்ட, மதிப்புமிகு உலோகங்கள் மீதான வர்த்தகம், கணக்கீட்டு காலத்தில், 27.06 சதவீதம் குறைந்து, 40.62 லட்சம் கோடியிலிருந்து, 29.63 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
உலோகங்கள்:இதர உலோகங்கள் மீதான வர்த்தகம், 24.16 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 16.10 லட்சம் கோடியிலிருந்து, 12.21 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், எரிசக்தி மீதான முன்பேர வர்த்தகம், 14.44 சதவீதம் சரிவடைந்து, 19 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 16.28 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது என, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷனின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|