பதிவு செய்த நாள்
26 அக்2013
05:28
உயர்ந்து வரும் தீவனச் செலவும், குறைந்து வரும் கோழிகளுக்கான தேவையும், கோழிப்பண்ணை தொழிலை கடுமையாக பாதித்துள்ளது.
கோழித் தீவனத்தில் இடம் பெறும் முக்கிய பொருளான மக்காச் சோளத்தின் விலை, கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. இத்துடன்,இதர மூலப் பொருட்களான, சோயா, கம்பு, இறக்குமதி செய்யப்பட்ட அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் போன்ற வற்றின் விலையும், 25 – 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
உற்பத்தி செலவு:இதனால், கோழிகளுக்கான உற்பத்தி செலவினம், கிலோவுக்கு, 8 – 10 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கோழி உற்பத்திக்கான அடக்க விலை, 63 – 65 ரூபாயாக உயர்ந்துள்ளது.தென் மாநிலங்களில் இருந்து, வட மாநிலங்களைச் சேர்ந்த, கோழிப் பண்ணையாளர்கள் அதிக அளவில் தீவனங்களை வாங்குகின்றனர்.
இதனால், தென் மாநில கோழிப் பண்ணையாளர்களை விட, வட மாநில பண்ணையாளர்களுக்கு, கோழிக்கான உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.இந்நிலையில், நாடு முழுவதும், கோழிகளுக்கான தேவை குறைந்துஉள்ளது. இதனால், கோழிகளின் பண்ணை விலையும், சரிவடைந்து வருகிறது.
ஒருபுறம், கோழியின் உற்பத்திச் செலவினம் உயர்ந்து வர, மறுபுறம் அதற்கான தேவை குறைவால், விலை சரிவடைந்துள்ளது. இதனால், கோழிபண்ணையாளர்கள், இரு வகையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை:சென்ற ஜூன் மாதம், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட, தென்னிந்திய நகரங்களில், ஒரு கிலோ கோழியின் பண்ணை விலை, 80 – 83 ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது, தற்போது, 34 சதவீதம் சரிவடைந்து, 55 ரூபாயாக குறைந்துள்ளது.
அது போன்று, இதே காலத்தில், டில்லி, லக்னோ, சண்டிகர் போன்ற வட இந்திய நகரங்களில், கோழியின் பண்ணை விலை, 93 ரூபாயில் இருந்து, 62 ரூபாயாக சரிவடைந்துள்ளது.இதனால்,கோழி உற்பத்தியாளர்களுக்கு, கிலோவுக்கு, 8 – 10 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இறக்குமதி:இது குறித்து, கர்நாடக கோழிப் பண்ணை யாளர்கள் சங்கத்தின் (கே.பி.எப்.பீ.ஏ.,) தலைவர் எம்.சி.ஆர். ஷெட்டி கூறியதாவது:கோழி உற்பத்தியாளர்கள், தீவனங்களில் சேர்ப்பதற்காக, அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்களை இறக்குமதி செய்கின்றனர்.
இப்பொருட்களின் விலை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால், 50 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது.கடந்த ஆண்டு, இதே காலத்தில், இப்பொருட்களின் விலை, 150 – 170 (கிலோ) ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 250 – 270 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது தவிர, கர்நாடகாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி காரணமாக, மக்காச் சோளம் உற்பத்தி குறைந்து, அதன் விலையும் உயர்ந்துள்ளது. இது போன்ற காரணங்களால், கோழித் தீவனங்களுக்கான செலவினம் அதிகரித்துள்ளது.
வளர்ச்சி:அதே சமயம், சிரவணம் முதல் கார்த்திகை (ஜூலை–நவ.,) வரை, மக்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பதால், கோழிகளுக்கான தேவை குறைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த, 2012ம் ஆண்டு, கோழிப் பண்ணை துறை, 17.2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 34 லட்சம் டன்னாக உயர்ந்திருந்தது. இது, முந்தைய, 2011ம் ஆண்டு, 29 லட்சம் டன்னாக இருந்தது.
கடந்த, 2000ம் ஆண்டு, உள்நாட்டில், கோழி உற்பத்தி, 10 லட்சம் டன்னாக இருந்தது. இந்திய கோழிப் பண்ணை துறை, ஆண்டுக்கு, 8 – 10 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. கறிக்கோழி துறையின் வளர்ச்சி, 10 சதவீதமாக உள்ளது.இக்ரா நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், கடந்த, 10 ஆண்டுகளில், தனி நபரின் ஓராண்டுக்கான கோழி நுகர்வு, 0.8 கிலோவில் இருந்து, 2.8 கிலோவாக உயர்ந்துள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|