பதிவு செய்த நாள்
29 அக்2013
04:22
தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்த நடவடிக்கைகளால், சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தி வருவது அதிகரித்துள்ளது.நடப்பு 2013-14ம் நிதிஆண்டின், ஏப்.,- செப்., வரையிலான, முதல் அரையாண்டில், 130 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தி வரப்பட்ட தங்கம், சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 338 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வழக்கு பதிவு:அதே சமயம், சென்ற நிதிஆண்டின் இதே காலத்தில், 28 கோடி ரூபாய் என்ற அளவிற்கே, கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. இது தொடர்பாக, காவல்துறையினர், 339 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேற்கண்ட காலத்தில், பிடிபட்ட கடத்தல் தங்கம், மதிப்பின் அடிப்படையில், 360 சதவீதம் உயர்ந்துள்ளது.இது, அளவின் அடிப்படையில்,99 கிலோவில் இருந்து, 500 கிலோவாக அதிகரித்துள்ளது.இதற்கு முந்தைய, 2012-13 மற்றும், 2011-12ம் நிதியாண்டுகளில், பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு, முறையே, 99 கோடி ரூபாய் மற்றும், 46 கோடி ரூபாய் என்ற அளவில், மொத்தம், 145 கோடி ரூபாயாக இருந்தது.கடந்த 2003-13ம் நிதியாண்டு வரை, 199 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது.
இதில், சென்ற நிதியாண்டில் பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு மட்டும், 99 கோடி ரூபாயாகும்.மதிப்பீடுகடந்த ஆறு மாதங்களில், இதுவரை இல்லாத அளவிற்கு கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. இருந்த போதிலும், அது, நம் நாட்டிற்குள் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மொத்த தங்கத்தில், 5-10 சதவீதம் தான், என, உத்தேசமாக மதிப்பிடப்பட்டு உள்ளது.எஞ்சிய தங்கம், சுங்க இலாகா அதிகாரிகளின் பார்வையில் படாமல், உள்நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டுள்ளது.உலகளவில், போதை மருந்து கடத்தல் தான் அதிக மதிப்புள்ளதாக கருதப்படுகிறது.ஆனால், இந்தியாவை பொறுத்தவரை, கடந்த சில மாதங்களாக, கடத்தி வரப்படும் தங்கம், மதிப்பின் அடிப்படையில், போதைப் பொருளைவிஞ்சியுள்ளது.கருவூலம்:கடத்தல் தங்கத்தை யாரும் கோர முடியாது என்பதால், அதை மத்திய அரசு ஏலம் விட்டு, அதிலிருந்து கிடைக்கும் தொகையை கருவூலத்தில் சேர்த்துவிடும்.சென்ற நிதியாண்டில் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தை, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூலம் ஏலம் விட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், 100 கோடி ரூபாய் திரட்டப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.பறிமுதல்நடப்பு நிதியாண்டில் பறிமுதல் செய்யப்படும் கடத்தல் தங்கம் வரும், 2014-15ம் நிதியாண்டில் ஏலம் விடப்படும்.கடத்தல் தங்கம் பறிமுதலுக்கும், ஏலத்திற்கும் இடையே, குறைந்தபட்சம் ஆறு மாத இடைவெளி இருக்க வேண்டும். இருந்தபோதிலும், கடத்தல் தங்கம் தொடர்பாக ஒருவர் வழக்கு தொடர்ந்தால், ஏலம் விட, பல ஆண்டுகள் ஆகும்.
கை மேல் பலன் கிடைத்தது:மத்திய அரசு, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில், கடந்த ஓராண்டில், தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரியை, 6 சதவீதம் உயர்த்தி, 10 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.அது போன்று, தங்க நகைகளின் மீதான இறக்குமதி வரி, 10 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இத்துடன், தங்க நாணயங்கள், பதக்கங்கள் இறக்குமதிக்கு தடை விதிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.இதனால், தங்கம் இறக்குமதி, குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்துள்ளது.சென்ற ஏப்ரல் மாதம், 142 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இது, சென்ற செப்டம்பரில், 11.2 டன்னாக குறைந்துள்ளது. இதே காலத்தில், இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு, 36,223 கோடியில் இருந்து, 3,150 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|