பதிவு செய்த நாள்
30 அக்2013
23:49
வாஷிங்டன்: சர்வதேச அளவில், மிகச் சுலபமாக வர்த்தகம் புரியக் கூடிய, 189 நாடுகளின் பட்டியலை, உலக வங்கி வெளியிட்டு உள்ளது.இதில், சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. மிகக் கடுமையான வர்த்தக சூழல் கொண்ட நாடு என்ற வகையில், இந்தியா, 134வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில், இந்தியா, 131வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.அதே சமயம், வர்த்தக சூழலை மேம்படுத்துவதில், 114 நாடுகள், கடந்த ஆண்டை விட, நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன.
நடப்பாண்டில், இந்தியாவை விட, இதர ஆசிய நாடுகளான, சீனா, 40 இடங்கள் முன்னேறி, 96வது இடத்தையும், பாகிஸ்தான், 110வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில், நேபாளம், 105வது இடத்தையும், வங்கதேசம், 130வது இடத்திற்கும் தேர்வாகி உள்ளன.பிரிக்ஸ் நாடுகள் என்று அழைக்கப்படும், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் வர்த்தகம் புரிவது மிகக் கடுமையானதாக உள்ளது என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற, 2012–13ம் நிதியாண்டில், 114 நாடுகள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மிகச் சுலபமாக வர்த்தகம் புரியும் வகையில், 238 ஒழுங்குமுறை சீர்திருத்த அம்சங்களை நடைமுறைப்படுத்தி உள்ளன. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் எண்ணிக்கையை விட, 18 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஆண்டு, மத்திய அரசு, இந்தியாவில் சுலபமாக வர்த்தகம் புரிவதற்கான ஆலோசனை வழங்க, ‘செபி’யின் முன்னாள் தலைவர் எம்.தாமோதரன் தலைமையில், குழு ஒன்றை நியமித்தது.இக்குழு, அதன் அறிக்கையை, கடந்த மாதம், மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.அந்த அறிக்கையில், அரசு மேற்கொள்ள வேண்டிய, பல்வேறு ஒழுங்குமுறை மற்றும் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ள நிலையில், மத்திய அரசு, அன்னிய முதலீடுகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளை, மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சாதகமற்ற சூழலில், உலக வங்கியின் பட்டியல் வெளியாகி உள்ளது. முதல் 10 இடங்களில் சிங்கப்பூர், ஹாங்காங், நியூசிலாந்து, அமெரிக்கா, டென்மார்க், மலேசியா, கொரியா, ஜார்ஜியா, நார்வே, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|