பதிவு செய்த நாள்
02 நவ2013
00:13
புதுடில்லி:நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி, சென்ற செப்டம்பர் மாதத்தில், 8 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.இது, கடந்த 11 மாதங்களுக்குப் பின், காணப்படும் அதிகபட்ச வளர்ச்சியாகும்.
நிலக்கரி:கடந்த, 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம், முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி 8.3 சதவீதம் என்ற அளவில் இருந்தது. அதனுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில், இதன் வளர்ச்சி சற்று குறைந்துள்ளது என, மத்திய அரசு வௌியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய எட்டு துறைகளின் கீழ், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம் சுத்திகரிப்பு பொருட்கள், உரம், மின்சாரம், உருக்கு மற்றும் சிமென்ட் ஆகிய துறைகள் இடம் பெற்றுள்ளன.
நாட்டின் தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கிடுவதில், மேற்கண்ட எட்டு துறைகளின் பங்களிப்பு, 38 சதவீதம் என்ற அளவில் உள்ளது.சென்ற ஆகஸ்ட் மாத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 0.6 சதவீதம் என்ற அளவில் மிகவும் சரிவடைந்து போனது. இது, இதற்கு முந்தைய ஜூலை மாதத்தில், 2.7 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.
எனவே, செப்டம்பர் மாதத்தில், முக்கிய எட்டு துறைகள் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது என்பது, நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மதிப்பீட்டு மாதத்தில், மின்சாரம், கச்சா எண்ணெய், உருக்கு ஆகிய துறைகளின் உற்பத்தி நல்ல அளவில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, சென்ற செப்டம்பரில், மின்சார துறையின் உற்பத்தி, 12.6 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய, 2012ம் ஆண்டின், இதே மாதத்தில், 3.9 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.
கச்சாஎண்ணை:இதே காலத்தில், உருக்கு துறையின் உற்பத்தி, 1.3 சதவீதம் என்ற அளவிலிருந்து, 6.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.கணக்கீட்டு மாதத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தி, 0.6 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
இது, கடந்தாண்டு இதே மாதத்தில், மைனஸ் 1.8 சதவீதம் என்ற அளவில் மிகவும் பின்னடைவை கண்டிருந்தது.அதேசமயம், சென்ற செப்டம்பரில், சிமென்ட் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 11.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
இது,கடந்தாண்டு இதே மாதத்தில், 13.8 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.
இதே காலத்தில், உரத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 5.7 சதவீதம் என்ற அளவிலிருந்து, 5.3 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், பெட்ரோலிய சுத்திகரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, 34.9 சதவீதம் என்ற அளவிலிருந்து, 8 சதவீதமாக குறைந்துள்ளது.
சென்ற செப்டம்பர் மாதத்தில், நாட்டின் இயற்கை எரிவாயு துறை உற்பத்தி, மைனஸ் 14.1 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது. இது, சென்ற ஆண்டு செப்டம்பரில், மைனஸ் 14.9 சதவீதம் என்ற அளவில் மிகவும் பின்னடைந்து காணப்பட்டது.
அதேசமயம், நிலக்கரி துறை உற்பத்தி, 12,5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில், இத்துறையின் வளர்ச்சி, 22.2 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில், நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 3.2 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இது, கடந்தநிதியாண்டின் இதே காலத்தில், 6.6 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.
சாதகமான விளைவுகள்:சென்ற செப்டம்பர் மாதத்தில் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி அதிகரித்துள்ளதை மட்டும் வைத்து, நாம் ஒரு முடிவிற்கு வர முடியாது. இந்தஎழுச்சி நிலை, மேலும், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு தொடரும் பட்சத்தில்தான், உறுதியாககூறமுடியும்.
இருப்பினும், முக்கிய எட்டு துறைகள் உற்பத்தி அதிகரித்துள்ளது, செப்டம்பர் மாத தொழில்துறை உற்பத்தியில், நிச்சயம் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என, கிரிசில் அமைப்பின் முதன்மை பொருளாதார ஆலோசகர் டீ.கே. ஜோஷி தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|