பதிவு செய்த நாள்
04 நவ2013
00:45
தங்கம் இறக்குமதிக்கான வரி, பல மடங்கு உயர்த்தப்பட்டதால், மத்திய அரசுக்கு, குறிப்பிடத்தக்க அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கட்டுப்பாடுஅவற்றுள் ஒன்றாக, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், அதன் மீதான சுங்க வரி, சென்ற ஜூன் மாதம், 6 சதவீதத்தில் இருந்து, 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது, ஆகஸ்ட் மாதத்தில், 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
அதே சமயம், தங்க நாணயங்கள், தங்கப் பதக்கங்கள் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டது.மேலும், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில், 20 சதவீதம், மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மறு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டது.இத்தகைய நடவடிக்கைகளால், தங்கம் இறக்குமதி குறைந்துஉள்ளது. இதனால், மத்திய அரசின் சுங்க வரி வருவாயும் சரிவடைந்துள்ளது.
சென்ற ஏப்ரலில், 36,223 கோடி ரூபாய் மதிப்பிற்கு, தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இதன் மூலம், மத்திய அரசுக்கு, 2,195 கோடி ரூபாய், சுங்க வரி வருவாய் கிடைத்தது.அதே சமயம், சென்ற செப்டம்பரில், 3,150 கோடி ரூபாய் மதிப்பிலான, 7.14 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசுக்கு சுங்க வரியாக, 113 கோடி ரூபாய் தான் கிடைத்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில், தங்கம் மீதான இறக்குமதி வரி, 5 முறை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு மூலம், கூடுதலாக, 4,830 கோடி ரூபாய் கிடைக்கும் என, அரசு தெரிவித்திருந்தது.
ஏற்றுமதி:ஆனால், அதற்கு நேர்மாறக, அரசின் சுங்க வரி வசூல் குறைந்துள்ளது. இது குறித்து, நிதி அமைச்சகத்தை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது:தங்கம் இறக்குமதி வரி, 6 சதவீதமாக இருந்த போது, அரசுக்கு அதிக வரி வருவாய் கிடைத்தது. அதன் பின்னர் இரு முறை வரி உயர்த்தப்பட்டதால், வரி வருவாய் சரிவடைந்துள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
சென்ற ஜூலை – செப்டம்பர் வரையிலான காலாண்டில், மத்திய அரசுக்கு, இறக்குமதி வரி வாயிலாக, 1,055 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே காலத்தில், வசூலிக்கப்பட்டதை (1,897 கோடி ரூபாய்) விட, 44 சதவீதம் குறைவாகும்.சென்ற ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், தங்கம் மீதான இறக்குமதி வரி, 6 சதவீதமாக இருந்தபோது (ஜூன் தவிர்த்து), சுங்க வரி வசூல், 250 சதவீதம் உயர்ந்து, 5,172 கோடி ரூபாயாக இருந்தது.
இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 1,479 கோடி ரூபாய் என்ற அளவிற்கே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஏப்ரல் மாதம், தங்கம் மீதான இறக்குமதி வரி, 6 சதவீதமாக இருந்தபோது, 142.50 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.இது, மே மாதம், 162 டன்னாக உயர்ந்தது.ஜூன் மாதம், தங்கம் மீதான இறக்குமதி வரி, 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, அம்மாதத்தில், தங்கம் இறக்குமதி, 31.50 டன்னாக வீழ்ச்சி கண்டது. எனினும், ஜூலை மாதம், தங்கம் இறக்குமதி, சற்று அதிகரித்து, 47.50 டன்னாக உயர்ந்தது.நிலை மாறும்இந்நிலையில், தங்கம் மீதான இறக்குமதி வரி, 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம், அதன் இறக்குமதி, 2.50 டன்னாக வீழ்ச்சி கண்டது.
நடப்பு நிதியாண்டின், இரண்டாவது அரையாண்டில், மாதத்திற்கு, 10–15 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 700 கோடி ரூபாய் சுங்க வரி கிடைக்கும். முழு நிதியாண்டில், 7,000 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கும் என, தெரிகிறது.இது, சென்ற நிதியாண்டில், 10,463 கோடி ரூபாயாக இருந்தது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|