பதிவு செய்த நாள்
10 டிச2013
03:11
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று மிகவும் சிறப்பாக இருந்தது. தேர்தல் முடிவு எதிரொலியால், பங்கு வர்த்தகம் துவக்கத்திலிருந்தே சூடுபிடித்து காணப்பட்டது. இறுதியில், 'சென்செக்ஸ்', 1.57 சதவீதம் மற்றும் 'நிப்டி', 1.44 சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தன.
சீனாவின் ஏற்றுமதி எதிர்பார்ப்பை விட அதிகரித்துள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நன்கு இருந்தது. இதுவும், இந்திய பங்குச் சந்தைகளுக்கு வலுச்சேர்ப்பதாக இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், வங்கி, ரியல் எஸ்டேட், பொறியியல், எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
அதேசமயம், நுகர்வோர் சாதன துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் தேவை குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 329.89 புள்ளிகள் அதிகரித்து, 21,326.42 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 21,483.74 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 21,282.64 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், சேசா ஸ்டெர்லைட், மாருதி, எல் அண்டு டி உள்ளிட்ட, 26 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், ஜிந்தால் ஸ்டீல், சிப்லா, டாட்டா ஸ்டீல் மற்றும் எச்.யு.எல். ஆகிய நான்கு நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 90.15 புள்ளிகள் உயர்ந்து, 6,350.05 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,415.25 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,345 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|