பதிவு செய்த நாள்
17 டிச2013
00:29
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று, ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.இந்நிலையில், சென்ற நவம்பர் மாதத்தில், நாட்டின் பொதுப் பணவீக்கம், கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு, 7.52 சதவீதமாக அதிகரித்துள்ளது என்ற செய்தி வெளியானது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி, நாளை வெளியிட உள்ள அதன் காலாண்டு நிதி ஆய்வு கொள்கையில், ‘ரெப்போ’ வட்டி விகிதங்களை அதிகரிக்கும் என்ற நிலைப்பாட்டால், பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
அதேசமயம், சீனாவில் தயாரிப்பு துறை உற்பத்தி எதிர்பார்ப்பை விட குறையும் என்ற மதிப்பீட்டால், கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு, இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.நேற்றைய வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, மோட்டார் வாகனம், வங்கி, நுகர்பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.அதேசமயம், தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் சாதன துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் தேவை காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 56.06 புள்ளிகள் சரிவடைந்து, 20,659.52 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,764.52 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,637.77 புள்ளிகள் வரையிலும் சென்றது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஜிந்தால் ஸ்டீல், சன்பார்மா, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் உள்ளிட்ட, 19 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், சேசா ஸ்டெர்லைட், டாட்டா பவர், கோல் இந்தியா உள்ளிட்ட, 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 13.70 புள்ளிகள் குறைந்து, 6,154.70 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிக பட்சமாக, 6,183.25 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,146.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|