பதிவு செய்த நாள்
19 டிச2013
00:48
மும்பை: ரிசர்வ் வங்கியின் கவர்னர், ரகுராம் ராஜன் காலாண்டு நிதி ஆய்வு கொள்கையை, நேற்று வெளியிட்டார். இதில், வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதங்கள் மற்றும் ரொக்க இருப்பு விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.கடந்த நவம்பர் மாதத்தில், நாட்டின் பொதுப் பணவீக்கம், 7.52 சதவீதமாகவும், சில்லரை பணவீக்கம், 11.24 சதவீதமாகவும் மிகவும் அதிகரித்திருந்தது.
வரவேற்பு: இதனால், வங்கிகளுக்கான வட்டி விகிதம், 0.25 சதவீதம் உயர்த்தப்படலாம் என்ற கருத்து நிலவியது.ஆனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை. இதற்கு, பல்வேறு துறையினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.ஒரு சில காய்கறிகளின் விலை அதிகரித்ததையடுத்தே, நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், வேளாண் உற்பத்தி சிறப்பாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது,
எனவே, இனிவரும் காலத்தில், விளைபொருட்களின் விலை குறைந்து, பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மதிப்பீட்டின் அடிப்படையிலும், பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்திடும் வகையிலும், வங்கிகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு முறை:ரகுராம் ராஜன் சென்ற செப்டம்பர் மாதம், ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பேற்ற பின், இரண்டு முறை, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, தலா, 0.25 சதவீதம் என்ற அளவில் உயர்த்தினார்.தற்போது, வங்கிகள் குறைந்த கால அடிப்படையில், ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதம், (ரெப்போ) 7.75 சதவீதம் என்ற அளவிலும், வங்கிகள், குறைந்த கால அடிப்படையில், ரிசர்வ் வங்கிக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம், (ரிவர்ஸ் ரெப்போ) 6.75 சதவீதம் என்ற அளவிலும் உள்ளன.
வங்கிகள் திரட்டும் மொத்த டெபாசிட்டில், குறிப்பிட்ட தொகையை, ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டும். இதற்கு, ரொக்க இருப்பு விகிதம் என்று பெயர். இதுவும், 4 சதவீதம் என்ற அளவில் மாற்றம்இல்லாமல் விடப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதம் என்ற அளவில் இருக்கும். இது, நடப்பு நிதிஆண்டின் முதல் காலாண்டில், 4.4 சதவீதம் என்ற அளவில் இருந்தது.இது, இரண்டாவது காலாண்டில், 4.8 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. ஆக, நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், பொருளாதார வளர்ச்சி, 4.6 சதவீதமாக உள்ளது.
எனவே, முழு நிதியாண்டில், இந்த வளர்ச்சி, 5 சதவீதமாக இருக்கும்.கடந்த நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 8,800 கோடி டாலர் அல்லது 4.8 சதவீதம் என்ற அளவில் இருந்தது.மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால், நடப்பு கணக்கு பற்றாக்குறை கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக, செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 1.2 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முதல் காலாண்டில், 4.9 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
தங்கம் இறக்குமதி: நடப்பு நிதியாண்டில் தங்கம் இறக்குமதி, 500 டன்னாக சரிவு அடையும் என, மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டில், 845 டன்னாக அதிகரித்திருந்தது.இறக்குமதி குறைந்து, ஏற்றுமதி அதிகரித்து வருவதால், நடப்பு நிதியாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 5,600 கோடி டாலராக குறையும் என, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மதிப்பீடு செய்துள்ளன.
மத்திய அரசு, செலவினங்களை கட்டுப்படுத்தி, தேங்கி கிடக்கும் திட்டங்களை செயல் படுத்தும் நிலையில், பொருளாதார வளர்ச்சி, அதிகரிக்கும் என்பதுடன், நிதி பற்றாக் குறையும், கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு ரகுரம் ராஜன் தெரிவித்தார்.
பணவீக்கம் குறையும்: ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு குறித்து, திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறியதாவது:ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிச்சயம் மேம்படும். பணவீக்கம் குறையும் என்ற ரிசர்வ் வங்கியின் மதிப்பீடும் சரியானதாகவே இருக்கும்.சந்தை வட்டாரத்தில், வங்கிகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப் படலாம் என்ற கருத்து நிலவிய நிலையில், ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை குறைக்காதது வரவேற்கத்தக்க அம்சமாகும்.இவ்வாறு, அலுவாலியா தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|