பதிவு செய்த நாள்
19 டிச2013
12:46
சென்னை: 'கமிஷன் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 24ம் தேதி, அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் மூடப்படும்' என, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்க பொதுச் செயலர், ஹைதர் அலி தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: தமிழகத்தில், 4,400 பெட்ரோல் பங்க் உட்பட, நாடு தழுவிய அளவில், 44 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. பெட்ரோல் பங்க் உரிமையாளர் கோரிக்கைகள் குறித்து ஆராய, பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் அடங்கிய, அபூர்வ சந்திரா கமிட்டியை, மத்திய அரசு அமைத்தது. இந்த கமிட்டி, 'விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, ஆறு மாதத்திற்கு ஒரு முறை, பெட்ரோல், டீசல் விற்பனை கமிஷன் தொகையை மாற்றி அமைத்தல், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் போது, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 0.09 பைசாவும், டீசலுக்கு, 0.08 பைசாவும் உயர்த்தி வழங்க வேண்டும்' போன்ற பரிந்துரைகளை, மத்திய அரசிடம் வழங்கியது. ஆனால், மத்திய அரசு, இந்த பரிந்துரைகளை, 2012, ஜன., முதல் அமல்படுத்தாமல் உள்ளது. எனவே, கோரிக்கைகளை வலியுறுத்தவும், அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கவும், நாடு தழுவிய அளவில், வரும், 22, 23ம் தேதிகளில், பெட்ரோல் பங்க்குகளில், மாலை, 6:00 மணி முதல் அதிகாலை, 6:00 மணி வரை, விளக்குகள் அணைத்து போராட்டம் நடத்தப்பட உள்ளது. 24ம் தேதி, பெட்ரோல் பங்க்குகளை மூடி, 'ஸ்டிரைக்' நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|