பதிவு செய்த நாள்
22 டிச2013
00:21
சாதகமற்ற பருவ நிலை மற்றும் பயிரிடும் பரப்பளவு குறைந்ததால், நடப்பாண்டு, ஆமணக்கு உற்பத்தி, 40 சதவீதம் குறைந்து, 11 லட்சம் டன்னாக சரிவுஅடையும் என, மதிப்பிடப்பட்டுஉள்ளது. இது, சென்ற ஆண்டு, 24 லட்சம் டன்னாக இருந்தது.
ஆந்திரா:வழக்கமாக, செப்டம்பரில், ஆமணக்கு பயிரிடும் காலம் துவங்கி, 5 - 6 போக சாகுபடி நடைபெறும். ஜனவரியில், முதல் அறுவடை துவங்கும்.ஆமணக்கு உற்பத்தியில், குஜராத், ஆந்திரா ஆகிய இரு மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. இங்கு, நடவு காலத்தில், மழை பொழிவு குறைவாக இருந்ததால், ஆமணக்கு பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளது.
இது குறித்து, குஜராத்தைச் சேர்ந்த, சிவம் ஆயில் மில்ஸ் நிறுவனத்தின் இயக்குனர், மனோஜ் அகர்வால் கூறியதாவது:விவசாயிகள், வழக்கமாக பயிர் செய்யும் நிலத்தில் கூட, ஆமணக்கை பயிரிடவில்லை. இதனால், அதன் பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக, ஆமணக்கு உற்பத்தி சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.நடப்பாண்டு, மொத்த ஆமணக்கு உற்பத்தி, 10 - 11 லட்சம் டன்னாக இருக்கும். ஏற்கெனவே கையிருப்பில் உள்ள 3 லட்சம் டன்னை சேர்த்தால், மொத்தம் 14 லட்சம் டன் ஆமணக்கு கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மருத்துவ பயன்பாடு:உள்நாட்டில், ஆண்டுக்கு, 18 - 19 லட்சம் டன் ஆமணக்கு தேவைப்படுகிறது.ஆமணக்கில் இருந்து மருத்துவ பயன்பாட்டிற்கான விளக்கெண்ணெய் தயாரிக்கப்படுகிறது.சர்வதேச அளவில், விளக்கெண்ணெய்க்கான தேவையில், 90 சதவீதத்தை, இந்தியா பூர்த்தி செய்து வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு ஆமணக்கு உற்பத்தி அதிகரிப்பால், விவசாயிகள், ஒரு குவிண்டால் ஆமணக்கை, 3,500 - 3,600 ரூபாய் என்ற அளவில், விற்பனை செய்தனர்.
ஏற்றுமதி விலை:இது, ஒரு டன் விளக்கெண்ணெயின் ஏற்றுமதி விலையான, 1,200 - 1,250 டாலருக்கு சமமாக, அதாவது, 6,000 - 7,000 ரூபாய் என்ற அளவிற்கு இருந்திருக்க வேண்டும் என, மனோஜ் அகர்வால் மேலும் கூறினார்.கடந்த, 2011ம் ஆண்டு, ஆமணக்கு உற்பத்தி, 24 லட்சம் டன்னாக இருந்த போது, ஒரு டன் விளக்கெண்ணெய் விலை, 2,600 - 2,800 டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, எண்ணெய் உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:இந்திய ஆமணக்கு விவசாயிகள், ஆதரவற்று, ஏற்றுமதியை சார்ந்தே உள்ளனர் என்பது, பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு வர்த்தகர்களுக்கும் நன்கு தெரியும்.இதை, அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவை சேர்ந்த, இரண்டு அல்லது மூன்று நிறுவனங்களுடன் ஆமணக்கு கொள்முதல் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டுஉள்ளனர்.
கொள்முதல்:இந்த நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்காக, விவசாயிகளிடம் இருந்து, மிகக் குறைந்த விலையில், ஆமணக்கை கொள்முதல் செய்கின்றன.ஆகவே, மத்திய அரசு, ஆமணக்கிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, இரு மடங்கு உயர்த்தி, டன்னுக்கு, 6,000 - 7,000 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|