பதிவு செய்த நாள்
23 டிச2013
04:33
மும்பை:வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,), வங்கி டெபாசிட், ரியல் எஸ்டேட், நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதை விட, இந்தியாவில் வசிக்கும் தங்கள் குடும்பத்தினருக்கு செலவிடுவது அதிகமாக உள்ளது என, தெரியவந்துள்ளது.
பண்டிகை:டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவாலும், என்.ஆர்.ஐ.,க்கள் அனுப்பும் தொகை அதிகரித்து வருகிறது.அண்மைக் காலமாக, அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள், அவர்கள் ஈட்டும் வருமானத்தில், இந்தியாவிற்கு அனுப்பும் தொகையை, அதிகளவில் முதலீடு செய்வதை விட, தங்களது குடும்பத்தினரின் செலவிற்காகவும், சமூக மற்றும் பண்டிகை கால நிகழ்ச்சிகளுக்கும் அதிகம்செலவிடுவதாக, ரிசர்வ் வங்கி, வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இந்தியாவில், இவர்களின் முதலீடு, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக, 2006–07ம் நிதியாண்டிலிருந்து, 2012–13ம் நிதியாண்டு வரையிலுமான மூன்று ஆண்டுகளில், என்.ஆர்.ஐ.,க்கள், அனுப்பிய மொத்த தொகையில், குடும்ப பராமரிப்பிற்காக செலவிடும் தொகை, முறையே, 54, 61 மற்றும் 49 சதவீதம் என்ற அளவில் உள்ளது.இதே காலத்தில், என்.ஆர்.ஐ.,க்கள், இந்தியாவில் உள்ள வங்கிகளில் மேற்கொண்டுள்ள டெபாசிட், 20 சதவீதம் என்ற அளவில் நிலையாக உள்ளது. அதேசமயம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அசையாச் சொத்துகளில் மேற்கொண்ட முதலீடு முறையே, 10, 4 மற்றும் 3 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்துள்ளது.
இருப்பினும், கணக்கீட்டு நிதியாண்டுகளில், என்.ஆர்.ஐ.,க்கள், இந்தியா நிறுவன பங்குகளில் மேற்கொண்ட முதலீடு முறையே, 3, 3 மற்றும் 4 சதவீதம் என்ற அளவில் உள்ளது.இந்நிலையில், கடந்த 2012–13ம் நிதியாண்டில், என்.ஆர்.ஐ.,க்கள் இந்தியாவில், சமூக மற்றும் பண்டிகை கால நிகழ்ச்சிகளுக்காக, அவர்கள் அனுப்பும் தொகையில், 3 சதவீதத்தை செலவிட்டுள்ளனர். இதற்கு முந்தைய நிதியாண்டுகளில், இது போன்ற செலவினங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி:மேற்கண்டவை தவிர, இதர வகைகளுக்காக, இந்தியாவில், அவர்கள் செலவிட்ட தொகை முறையே, 13, 12 மற்றும் 21 சதவீதம் என்ற அளவில் இருந்தது.கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக, என்.ஆர்.ஐ.,க்கள், இந்தியாவிற்கு அனுப்பும் தொகையை அவர்களே பராமரித்து வந்ததுடன், அனுப்பும் மொத்த தொகையில், 10 சதவீதத்தை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அசையாச் சொத்துகளில் முதலீடு செய்தனர்.ஆனால், சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சுணக்க நிலையால், கடந்த 2009–10ம் நிதியாண்டில், என்.ஆர்.ஐ.,க்கள் அனுப்பிய தொகை ஓரளவிற்கு குறைந்தது.இருப்பினும், அவ்வாண்டில், என்.ஆர்.ஐ.,க்கள் அனுப்பிய மொத்த தொகையில், 61 சதவீதம் அவர்களின் குடும்ப பராமரிப்பிற்காக செலவிடப்பட்டது.என்.ஆர்.ஐ.,க்கள் இந்தியாவில், தங்கம் உள்ளிட்ட மதிப்பு மிகு உலோகங்கள் மீது, முதலீடு மேற் கொள்ளவில்லை. இது, வரவேற்கக் கூடிய அம்சம் என, ரிசர்வ் வங்கி, தெரிவித்துள்ளது. என்.ஆர்.ஐ.,க்கள் இந்தியாவிற்கு அனுப்பும் தொகையில், மேற்கொள்ளப் படும் முதலீடு நகரத்திற்கு நகரம் வேறுபடுகிறது.
பராமரிப்பு:என்.ஆர்.ஐ.,க்கள் சென்னைக்கு அனுப்பும் தொகையில், 53 சதவீதம் குடும்ப பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்கு செலவிடப்படுகிறது. இது, ஆமதாபாத்தில், 72 சதவீதம் என்ற அளவில் உள்ளது.பெங்களூருக்கு அனுப்பப்படும் மொத்த தொகையில், 10 சதவீதம் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. லக்னோவில், என்.ஆர்.ஐ.,களால் அனுப்பப்படும் மொத்த தொகையில், 6 சதவீதம் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அசையாச் சொத்துகளில் முதலீடு செய்யப்படுகின்றன.இந்திய நிறுவனங்களை வளைக்கும் ஜப்பானியர்கள்:நடப்பாண்டில் 16 ஒப்பந்தங்கள் கையொப்பம்ஜப்பான் நிறுவனங்கள், அதிக அளவில், இந்திய நிறுவனங்களை வளைத்துப் போட்டு வருகின்றன. அதே சமயம், இதர முன்னேறிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவது குறைந்து வருகிறது.
மும்பை:நடப்பாண்டில், இதுவரை, 341 கோடி டாலர் மதிப்பிற்கு, ஜப்பான் நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களை, பகுதியாகவோ, மொத்தமாகவோ கையகப்படுத்தியுள்ளன.சென்ற ஆண்டு, இதே காலத்தில், 386 கோடி டாலர் மதிப்பில், 10 நிறுவனங்கள் மொத்தமாகவோ, பகுதியாகவோ கையகப்படுத்தப்பட்டுள்ளன.இதுகுறித்து, வென்சுரா இன்டெலிஜென்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்:
ஜப்பான் நிறுவனங்களின் விருப்பத் தேர்வாக, மும்பை நகரம் உள்ளது. கடந்த, 2009 முதல், நடப்பு, 2013ம் ஆண்டு வரை, மும்பையை சேர்ந்த, 16 நிறுவனங்களை, ஜப்பான் நிறுவனங்கள் கையகப்படுத்தியுள்ளன.இந்த வரிசையில், டில்லி (6), கோல்கட்டா (6), பெங்களூரு (4), கூர்கான் (4) மற்றும் சென்னை, புனே, ஆமதாபாத் நகரங்களில், தலா இரண்டு நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளன.ஜப்பானியர்கள், இந்தியாவில் அடிப்படை கட்டமைப்பு, நுகர்வோர், நிதிச் சேவை, ரசாயனம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளை சார்ந்த இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவதில், அதிக ஆர்வம் காட்டுகின்றன.
மக்கள் தொகை:அதே சமயம், இந்திய நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து செயல்படவும் விரும்புகின்றன. அரசு மற்றும் தொழிலாளர் சார்ந்த பிரச்னைகளுக்கு, உள்நாட்டு நிறுவனங்கள், சுலபமாக தீர்வு காணும் என்ற நோக்கத்தில், இத்தகைய கூட்டு நடவடிக்கை அமைகின்றன.மக்கள் தொகை பெருக்கத்தால், இந்தியாவில் பல்வேறு துறைகளுக்கு சிறப்பான வர்த்தக வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு, நீண்ட கால அடிப்படையில், இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|