பதிவு செய்த நாள்
26 டிச2013
00:20
நடப்பாண்டு, இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் அன்னியச் செலாவணியிலான கடன்பத்திரங்களை வெளியிட்டு, 900 கோடி டாலர் திரட்டிக் கொண்டுள்ளன. இது, சென்ற, 2012ம் ஆண்டு திரட்டப்பட்ட, 412 கோடி டாலரை விட, இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய நிறுவனங்களின் மீது, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதையே, இது காட்டுகிறது என, வங்கியாளர் ஒருவர் தெரிவித்தார்.
தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், நடப்பாண்டு, வெளிநாடுகளில், 16 கடன் பத்திர வெளியீடுகளை மேற்கொண்டன. இது, சென்ற ஆண்டு, ஒன்பது என்ற அளவில் இருந்தது.நிறுவனங்கள் சார்பில், வெளிநாடுகளில் கடன் பத்திர வெளியீடுகளை மேற் கொண்டு, அதிக அளவில் அன்னியச் செலாவணியை (130 கோடி டாலர்) திரட்டிக் கொடுத்த வங்கிகளில், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்க் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் டச் பேங்க் உள்ளது. இவ்வங்கி, ஒன்பது கடன்பத்திர வெளியீடுகளை நிர்வகித்து, 129 கோடி டாலர் திரட்டிக் கொடுத்துள்ளது.
இந்த வரிசையில், ஜே.பி.மார்கன், ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து, சிட்டி பேங்க் ஆகியவை இடம்பெற்று உள்ளன.வரும் ஆண்டிலும், அதிக அளவில் அன்னியச் செலாவணியிலான கடன்பத்திர வெளியீடுகள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், வெளிநாட்டு கடன்பத்திரங்கள் மூலம், பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், 200 கோடி டாலர் அளவிற்கு நிதி திரட்டிக் கொள்ளும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|