பதிவு செய்த நாள்
30 டிச2013
05:05
புதுடில்லி: நடப்பு 2013–14ம் நிதிஆண்டில், மத்திய அரசு நிர்ணயித்துள்ள வருவாய் இலக்கு எட்ட வாய்ப்பில்லை என, பல்வேறு ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.வருவாய் இலக்கு எட்டப்படாத நிலையில், மத்திய அரசின் நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். எனவே, செலவினங்களை குறைப்பதை தவிர, அரசுக்கு வேறு வழி கிடையாது.மறைமுக வரிநடப்பு நிதியாண்டில், நேரடி மற்றும் மறைமுக வரிகள் வாயிலாக, 12.36 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், வருவாய் இலக்கில், 43 சதவீதம் மட்டுமே, எட்டப்பட்டுள்ளது.
மீதமுள்ள, 57 சதவீதத்தை, நவம்பர் முதல் மார்ச் வரையிலான ஐந்து மாத காலத்தில், எட்ட முடியாது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.நடப்பு நிதியாண்டில், மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், 54 ஆயிரம் கோடி ரூபாய் (இந்துஸ்தான் ஸிங்க்– எச்.இசட்.எல்., மற்றும் பால்கோ ஆகிய நிறுவனங்களில் மீதமுள்ள பங்கு விற்பனை உட்பட) திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.ஆனால், இதுவரை, பொதுத் துறை நிறுவனப் பங்குகள் விற்பனை மூலம், 3,000 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.எச்.இசட்.எல்., மற்றும் பால்கோ ஆகிய நிறுவனங்களில் மீதமுள்ள பங்குகளை விற்பனை செய்தாலும், 14 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும்.
எனவே, பொதுத் துறை பங்கு விற்பனையில், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பற்றாக்குறை ஏற்படும். வரி வருவாய் இலக்கில், 70 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும், ஆக, ஒட்டு மொத்த அளவில், 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படும்.நிதி பற்றாக்குறைநடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதி பற்றாக்குறை, 4.8 சதவீதத்திற்கும் அதிகமாக உயராத வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஆனால், தயாரிப்பு துறையில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலை மற்றும் நிறுவனங்களின் செயல்பாடு நன்கு இல்லாதது போன்றவற்றால், பொருளாதார தேக்க நிலை தொடர்ந்து நீடிக்கும் என்ற கருத்தும் உள்ளது.
நிறுவனங்களின் செயல்பாடு மந்த கதியில் உள்ளதால், அரசுக்கு அதிகளவில் வரி வருவாய் வரக்கூடிய நிறுவனங்கள் செலுத்தும் வரியும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பொருளாதார மந்த நிலையால், நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் உள்ளன. இதன் காரணமாக, பொறியியல் சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள் இறக்குமதியும், குறைந்துள்ளது. இது, சுங்க வரி வசூலில் தாக்கத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
தற்போதைய நிலையில், உள்நாட்டில், வேளாண் துறை தவிர்த்த ஏனைய அனைத்து துறைகளின் செயல்பாடு குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை.வருவாய் இலக்கு எட்டப்படாத நிலையில் மத்திய அரசு, அதன் பல்வேறு செலவினங்களை குறைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், இந்திரா அவாஸ் யோஜனா ஆகிய திட்டங்களுக்கான செலவினம் கணிசமாக குறைக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், இதுவரை, இத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில், குறிப்பிடத்தக்க அளவிற்கான தொகை செலவிடப்படாமல் இருப்பதும் இதற்கு காரணம்.
பொருளாதார வளர்ச்சி:மத்திய அரசு, அதன் வருவாயை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பொதுத் துறை நிறுவனங்கள், கடந்தாண்டை விட, நடப்பாண்டில் கூடுதலாக டிவிடெண்டு மற்றும் சிறப்பு டிவிடெண்டு வழங்க வேண்டும் என, வலியுறுத்தி வருகிறது.கடந்தாண்டை விட, நடப்பாண்டில், வருவாய் பற்றாக்குறை அதிகரிக்கும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதத்திற்கும் மேல் அதிகரிக்க வாய்ப்பில்லை என, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|