பதிவு செய்த நாள்
30 டிச2013
14:44
புதுடில்லி: சேவை வரி செலுத்தாதவர்கள், எவ்வித அபராதமும் இன்றி, நிலுவையில் உள்ள பாக்கிகளை செலுத்துவதற்கு அளிக்கப்பட்ட சலுகை காலம், நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து, ஏராளமான விண்ணப்பங்கள், இன்றும், நாளையும் குவியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டில் அறிவிப்பு : சேவை வரியை, வாடிக்கையாளர்களிடம் வசூலித்த நிறுவனங்கள், அவற்றை முறைப்படி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளன. இதையடுத்து, சேவை வரி செலுத்தாதவர்கள், பழைய பாக்கி முழுவதையும், தாமத கட்டணம், அபராத கட்டணமின்றி, செலுத்தும் வகையில், இந்தாண்டு பட்ஜெட் தாக்கலின் போது, நிதி அமைச்சர் சிதம்பரம், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதன் படி, 2007 அக்டோபர், 1ம் தேதி முதல், 2012 டிசம்பர், 31ம் தேதி வரை, நிலுவை வைத்துள்ள சேவை வரி மற்றும் கூடுதல் வரி உட்பட அனைத்தையும் முறைப்படி அறிவித்து, அவற்றை, டிசம்பர், 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இப்படி செய்தால், தாமதம் மற்றும் அபராத வட்டி செலுத்த வேண்டியது இல்லை என, சலுகை அளிக்கப்பட்டு இருந்தது.
பொது மன்னிப்பு அளிக்கும் காலமாக கருதப்பட்ட இது, கடந்த மே, 10ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதுவரை, 21 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், 3,762 கோடி ரூபாய் வரை செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சலுகை காலம், நாளையுடன் முடிவடைவதால், இன்றும், நாளையும் அதிகளவில் விண்ணப்பங்கள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், இதுபற்றி, கருத்து தெரிவித்த நிதி அமைச்சர், சிதம்பரம் கூறுகையில், சேவை வரி செலுத்துவோராக, 17 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால், 7 லட்சம் பேர் மட்டுமே கணக்கு தாக்கல் செய்துள்ளனர். மீண்டும் சலுகை காலம், அடுத்த 20 ஆண்டுகளுக்கு கிடையாது, என, குறிப்பிட்டு இருந்தார்.
வாரன்ட் இன்றி கைது: சேவை வரி, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள் ளவர்கள் மீது, வாரன்ட் பிறப்பிக்காமல், கைது நடவடிக்கை எடுக்க முடியும் என, சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. எனவே, இந்த சலுகை காலத்தை பயன்படுத்தி, அதிகமானோர் வரி செலுத்த முன்வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியாண்டில், மறைமுக வரி வசூல் மூலம், 5.65 லட்சம் கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|