பதிவு செய்த நாள்
30 டிச2013
14:51
சேலம்: தமிழகத்தில், மூலப்பொருட்கள் விலை உயர்வை காரணம் காட்டி, மில்கள், பேப்பர் விலையில், தொடர்ந்து அதிகரிப்பு செய்து வருகின்றன. நடப்பாண்டில், டன்னுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை, உயர்வு ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில், பேப்பர் தயாரிப்பில், சேசாயி, டி.என்.பி.எல்., பிலாஸ்பூர், ஜி.வி.ஜி., ஜே.ஜே., அமராவதி, கார்த்திகா' உட்பட, 50க்கும் மேற்பட்ட மில்கள் ஈடுபடுகின்றன. இந்த மில்களில், பேப்பர் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களான, நிலக்கரி, தோல், மரக்கூழ், கெமிக்கல் ஆகியன, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அமெரிக்க டாலருக்கு இணையான, இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு வரும் உயர்வு ஆகியவற்றின் காரணமாக, பேப்பர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால், அனைத்து ரக பேப்பர்களின் விலையிலும், கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த, 2012, டிச., கடைசி வாரத்தில், 'ஏ' கிரேடு பேப்பர்கள், டன், 48 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 2013, ஜனவரியில், 4,000 ரூபாய் உயர்ந்தது. தொடர்ந்து, மாதம் தோறும் விலை உயர்ந்து, தற்போது, 'ஏ' கிரேடு பேப்பர் ஒரு டன், 68 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 'ஏ' கிரேடு பேப்பர், நடப்பாண்டில் மட்டும், டன்னுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை, விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 'பி' கிரேடு பேப்பரும், இதே அளவுக்கு விலை உயர்வை சந்தித்துள்ளது. 2012ல், டன், 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது, தற்போது, 52 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில், வரும் ஜனவரி முதல், அனைத்து ரக பேப்பர் விலையிலும், டன்னுக்கு, 2,000 ரூபாய் உயர்த்த இருப்பதாக, பேப்பர் மில்கள், வியாபாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளன. பேப்பர்களின் விலை உயர்வு காரணமாக, நோட்டு புத்தகங்கள், நோட்ஸ்கள், வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் பேப்பர்கள், ஜெராக்ஸ் பேப்பர் உட்பட, அனைத்து பொருட்களின் விலையிலும், கடும் உயர்வு ஏற்படும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்ட பேப்பர் அலாய்டு அசோசியேஷன் உறுப்பினர் ரவி கூறியதாவது: மூலப்பொருட்களின் விலை உயர்வு மட்டுமின்றி, மின் தட்டுப்பாட்டால், பேப்பர் உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் அதிகரித்துள்ளதால், நடப்பாண்டில், 35 முதல் 45 சதவீதம் வரை பேப்பர் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கான நோட்ஸ்களின் விலையில், 60 சதவீதம் வரையில் உயர்வு ஏற்படும். வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தும் நோட்டுகளின் விலை உயர்வு, தவிர்க்க முடியாததாகி விடும். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|