பதிவு செய்த நாள்
05 ஜன2014
04:16
மும்பை:நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், நம் நாடு, 23,200 கோடி டாலர் மதிப்பிற்கு, பொருட்களை இறக்குமதி செய்து கொண்டுள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த, 2012 – 13ம் நிதியாண்டில், இந்தியாவின் ஒட்டு மொத்த இறக்குமதி, 49,100 கோடி டாலராக இருந்தது.நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டு மொத்த இறக்குமதியில், கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய அங்கம் வகிக்கும், ‘ஒபெக்’ நாடுகளின் பங்களிப்பு மட்டும், 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இந்நாடுகளிலிருந்து மட்டும், 9,200 கோடி டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய், இறக்குமதி செய்து கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, சீனாவிலிருந்து, 2,600 கோடி டாலர் மதிப்பிற்கும், ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து, 2,400 கோடி டாலர் மதிப்பிற்கும், பொருட்கள் இறக்குமதி செய்து கொள்ளப்பட்டுள்ளன.மதிப்பீட்டு அரையாண்டில், நம்நாட்டின் ஒட்டு மொத்த இறக்குமதியில், அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின் பங்களிப்பு, 5 சதவீதம் அல்லது 1,200 கோடி டாலராக உள்ளது.ஒட்டு மொத்த இறக்குமதியில், பெட்ரோலிய பொருட்களின் பங்களிப்பு மூன்றில் ஒரு பங்காக உள்ளது.இதையடுத்து, பொறியியல் சாதனங்கள் (மின்னணு சாதன பொருட்கள் உட்பட) இறக்குமதி மதிப்பு, 16 சதவீதம் அல்லது 4,400 கோடி டாலராக உள்ளது.
நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால், கணக்கீட்டு அரையாண்டில், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த இறக்குமதியில், இவற்றின் பங்களிப்பு, 9 சதவீதம் அல்லது 2,200 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.இது, கடந்த நிதியாண்டில், 5,600 கோடி டாலராக மிகவும் அதிகரித்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|