பதிவு செய்த நாள்
12 ஜன2014
04:17
சேலம்:ரியல் எஸ்டேட் தொழில் பெருக்கம், வறட்சி, நீலநாக்கு நோய், "ஆந்த்ராக்ஸ்' நோய் தாக்குதல் காரணமாக, தமிழகத்தில், ஆடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முதல், ஆட்டுக்கறி விலை, கிலோவுக்கு, 50 ரூபாய் வரை உயர்த்த, வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில், கால்நடைத் துறை கணக்கின்படி, 80 லட்சம் வெள்ளாடுகள், 93 லட்சம் செம்மறி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு நிலவிய வறட்சி, ரியல் எஸ்டேட் தொழில் பெருக்கத்தால் மேய்ச்சல் நில பரப்பளவு சுருங்கியது போன்ற காரணங்களால், ஆடு வளர்ப்பு தொழில், அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழகத்தில், நவ., டிச., மாதங்களில், நீலநாக்கு நோய், ஆந்த்ராக்ஸ் நோயின் தாக்குதலால், ஆடுகள் இறந்தன. இதனால், ஆடு வளர்ப்போர் கடும் இழப்பை சந்தித்து உள்ளனர்.ஆட்டுச் சந்தைகளுக்கு, விற்பனைக்கு வரும் ஆடுகளின் எண்ணிக்கை, கடுமையாக சரிந்துள்ளதால், வியாபாரிகளுக்கு போதிய எண்ணிக்கையில், ஆடுகள் கிடைக்கவில்லை.
தமிழக வியாபாரிகள், கர்நாடகா மாநிலம் தும்கூர், சின்கோனா, சிமோகா, மைசூர் ஆகிய பகுதிகளில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும், ஆடுகளை வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். ஞாயிற்றுக் கிழமையில், 20 லட்சம் கிலோ ஆட்டுக்கறியும், வார நாட்களில், 10 லட்சம் கிலோ ஆட்டுக்கறியும் விற்பனையாகிறது.இதுவே, பொங்கல், தீபாவளி பண்டிகைகளின் போது, 30 லட்சம் கிலோ வரை, விற்பனை ஆகிறது. ஆனால், ஆடுகளின் வரத்து, எதிர்பார்த்த அளவு இல்லாததால், ஆட்டுக்கறிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
தற்போது, தமிழகத்தில், ஆட்டுக்கறியின் விலையை பொறுத்த வரை, சென்னை, சேலம், திருச்சி, மதுரை, ஈரோடு ஆகிய இடங்களில், செம்மறியாட்டு கறி கிலோ, 430 ரூபாய்க்கும், வெள்ளாட்டுக் கறி கிலோ, 450 ரூபாய்க்கும் விற்கிறது.மார்க்கெட்டில் ஆட்டுக் கறியின் விலை, கிலோவுக்கு, 50 ரூபாய் வரை உயர்த்த, வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த விலை உயர்வு, பொங்கல் பண்டிகை முதல், அமலுக்கு வரும் என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.அதன்படி, பொங்கல் பண்டிகைக்கு பின், வெள்ளாட்டுக்கறி கிலோ, 500 ரூபாயாகவும், செம்மறி ஆட்டுக்கறி கிலோ, 480 ரூபாயாகவும், உயரும் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|