பதிவு செய்த நாள்
14 ஜன2014
12:28
கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில், தவணை தவறிய உறுப்பினர்களிடம் இருந்து வட்டி தள்ளுபடி திட்டத்தில், 100 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது. இது, 2012-13 நிதி ஆண்டை காட்டிலும், 250 கோடி ரூபாய் குறைவு.
தமிழகத்தில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில், 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். இவர்களில் ஏராளமானோர், தங்களது கடன் தவணைகளை, உரிய காலத்தில் செலுத்தாமல் விட்டு விடுகின்றனர். இதனால், அவர்கள் கணக்கில், அசல், வட்டி, அபராத வட்டி என்ற வகையில், நிலுவை தொகை உயர்ந்து கொண்டே போகிறது.
சிக்கல்: இதனால், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், புதிய கடன் வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. எனவே, நிலுவையில் உள்ள வட்டியை மட்டுமாவது தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, "2012-13ல் நிலுவை தொகையை செலுத்துவோருக்கு வட்டியில் ஒரு பகுதியும், அபராத வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்' என, அரசு அறிவித்தது. இதன்படி, 2012 செப்டம்பர், 30ம் தேதி வரையிலான ஆறு மாதத்துக்கு, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
நீட்டிப்பு: இத்திட்டத்தை, மேலும் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதை ஏற்று, 2013-14ல் செப்டம்பர், 30ம் தேதி வரை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், இதற்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என, கூறப்படுகிறது.
இதுகுறித்து, கூட்டுறவு வீட்டுவசதி இணையத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "வட்டி, அபராத வட்டி தள்ளுபடி திட்டத்தில், இந்த முறை, 100.90 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. கடந்த முறை இத்திட்டத்தில், 350 கோடி ரூபாய் வசூலானது. இப்போது குறைவாக வசூலானது குறித்து, ஆய்வு செய்து வருகிறோம்' என்றார்."ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்தில், நிலுவை தொகையை செலுத்தியவர்களின் ஆவணங்கள் முறையாக விடுவிக்கப்படாததே முக்கிய காரணம்' என்று உறுப்பினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
நிலுவையும்; வசூலும்!
* கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில், மொத்தம், 1.12 லட்சம் பேரிடம் இருந்து, 2,084 கோடி ரூபாய் நிலுவை இருந்தது.
* தள்ளுபடி திட்டத்தில், குறைந்த வருவாய் பிரிவினருக்கு, 75 சதவீதம்; நடுத்தர வருவாய் பிரிவினருக்கு, 50 சதவீதம்; உயர் வருவாய் பிரிவினருக்கு, 25 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது. இவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத வட்டியும், தள்ளுபடி செய்யப்படும்.
* 2012 13ல், தள்ளுபடி திட்டத்தில், 34,417 பேரிடம் இருந்து, 350 கோடி ரூபாய் நிலுவை தொகை வசூலானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|