பதிவு செய்த நாள்
15 ஜன2014
10:47
மும்பை : தொடர்ந்து ஏறி வந்த பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைக்க பெட்ரோலிய நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இது குறித்த அறிவிப்பு இந்த வாரம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதாலும் தொடர்ந்து ஏற்றப்படும் பெட்ரோல் விலையை சற்று குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாகவும், இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் கூடி முடிவு செய்ய உள்ளதாகவும் எண்ணெய் நிறுவனத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கூடி, பெட்ரோலிய பொருட்களின் விலை நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துவது வழக்கம். சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய விபரங்களை மும்பையை சேர்ந்த எண்ணெய் நிறுவன உறுப்பினர் ஒருவர் கூறி உள்ளார். இதில் பெட்ரோல் விலை குறைக்கப்பட உள்ளது உறுதியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை சீராக இருப்பதாலும், ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவதாலும் பெட்ரோல் விலையை குறைக்கலாமா என ஆலோசித்ததாக அவர் கூறி உள்ளார்.
ஜனவரி முதல் தேதி நிலவரத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரி 10ம் தேதி சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 104.77 டாலர்களாக உள்ளது. ஜனவரி முதல் தேதியன்று இது 108 டாலர்களாக இருந்தது. இந்திய ரூபாயின் ஏற்றம் காரணமாக இந்திய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை குறைந்து ஒரு பேரல் ரூ.6,489.45 ஆக உள்ளது. ஜனவரி முதல் தேதியன்று இந்திய சந்தைகளில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை ரூ.6,726 க்கு விற்பனையானது. டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதே இதற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.1 முதல் 1.50 வரை குறைக்க பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. வரி மற்றும் மாநில வரிகளுடன் சேர்ந்து பெட்ரோலின் விலை ரூ.2 வரை குறைய வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒவ்வொரு டாலர் குறையும் போதும் பெட்ரோலின் விலை 33 காசுகள் குறைக்கப்பட வேண்டும் என்பது விதி. அதேசமயம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் போதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 77 காசுகள் உயர்த்தப்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|