பதிவு செய்த நாள்
25 ஜன2014
01:56
புதுடில்லி:சேவை வரியை செலுத்தாதவர்களுக்கு, மத்திய அரசு, பொது மன்னிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், நாட்டின் நிதி பற்றாக்குறை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கு அளவான, 4.8 சதவீதமாக இருக்கும் என, மத்திய நிதி அமைச்சகத்தின் செயலர் சுமித் போஸ் தெரிவித்தார்.
கடந்த 2012 13ம் நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி.,), நிதி பற்றாக்குறை, 4.9 சதவீதமாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதை குறைக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அறிவிக்கப்பட்டது.அரசின் வருவாயை விட, செலவினங்கள் அதிகரிக்கும் போது, நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது.இந் நிலையில், நாடு தழுவிய அளவில், சேவை வரியை வசூல் செய்யும் பல நிறுவனங்களும், அமைப்புகளும், அதை அரசுக்கு செலுத்தாமல் இருந்து வந்தன.இதை தடுத்து நிறுத்திடும் வகையில், மத்திய அரசு, கடந்தாண்டு மே மாதம், 10ம் தேதி, "சேவைவரி பொது மன்னிப்பு' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது.இதன்படி, கடந்த டிச., 31ம் தேதிக்குள், நிலுவையில் உள்ள சேவை வரியை செலுத்துபவர்களுக்கு, அபராதம் மற்றும் காலதாமத கட்டணம் விதிக்கப்படாது என, அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, கூடுதலாக, 7,200 கோடி ரூபாய் மதிப்பிற்கு, சேவை வரி செலுத்தப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், சேவை வரி வாயிலாக, 1.80 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூடுதலாக, 7,200 கோடி ரூபாய் வந்துள்ளதால், நிதி பற்றாக்குறை, 4.8 சதவீதமாக இருக்கும்.மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், நேரடி வரி வசூல் வாயிலாக, 6.68 லட்சம் கோடி ரூபாயும், மறைமுக வரி வசூல் வாயிலாக, 5.65 லட்சம் கோடி ரூபாயும் திரட்ட, இலக்கு நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வாய்ப்பில்லை. ஏனெனில், நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், அது, அரசின் குறிக்கோளுக்கு இடையூறாக அமையும்.கடந்த 2013ம் ஆண்டில், மத்திய அரசு, தங்கம் இறக்குமதி மீதான வரியை, மூன்று முறை உயர்த்தி, 10 சதவீதமாக அதிகரித்தது. மேலும், தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக, கடந்த ஆண்டு மே மாதத்தில், 162 டன்னாக இருந்த தங்கம் இறக்குமதி, நவம்பரில், 19.3 டன்னாக சரிவடைந்துள்ளது. இவ்வாறு சுமித் போஸ் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|