பதிவு செய்த நாள்
30 ஜன2014
14:45
விழுப்பரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில், கயிறு தொழில் பூங்கா அமைக்க, தமிழக அரசு ஒத்துழைக்காததால், அதற்கு ஒதுக்கப்பட்ட, 70 கோடி ரூபாயை, கர்நாடக மாநிலத்துக்கு ஒதுக்க, கயிறு வாரியம் முடிவு செய்துள்ளது.'இதற்கான ஒப்புதல், கொச்சியில் பிப்., 11ம் தேதி நடக்கும், கயிறு வாரியத்தின் துணை குழு கூட்டத்தில் அளிக்கப்படும்' என, வாரியத்தின் துணைத் தலைவர் ராயர் கூறியுள்ளார்.
நடுத்தர தொழில்கள்: மத்திய அரசின், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் கீழ், மத்திய கயிறு வாரியம் இயங்குகிறது. 2013 - 14ல், நாட்டின் பல பகுதிகளில், கயிறு வாரியத்தின் கீழ், தொழில் பூங்கா அமைக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்துக்கு முதல் கட்டமாக, 500 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தமிழகத்தின், விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில், 200 ஏக்கரில், கயிறு பூங்கா அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கு, மத்திய கயிறு வாரியம், 70 கோடி; தமிழக அரசு, 10 கோடி; கதர், கிராம சர்வோதய சங்கம், 20 கோடி ரூபாய் அளிக்க வேண்டும். அதன்படி, மத்திய அரசின், 70 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது.
ஆனால், 'வழுதரெட்டி கிராமத்தில் நிலம் ஒதுக்கவும், மாநில அரசின் பங்குத் தொகையான, 10 கோடி ரூபாய் அளிக்கவும், தமிழக அரசு முன்வரவில்லை. இது குறித்து, தமிழக ஊரக தொழில் துறை அமைச்சரை சந்திக்க, பலமுறை முயன்றும், அனுமதி கிடைக்கவில்லை' என, கயிறு வாரிய துணைத் தலைவர் ராயர் குற்றம் சாட்டினார்.ராயரின் குற்றச்சாட்டுக்கு, தமிழக அரசு, இதுவரை பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதியை, கர்நாடகாவுக்கு ஒதுக்க, கயிறு வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, ராயர் நேற்று கூறியதாவது:
பலனில்லை: மத்திய அரசு ஒதுக்கிய நிதியை, செலவிடாமல் நீண்ட நாளைக்கு நிறுத்தி வைக்க முடியாது. மேலும், லோக்சபா தேர்தல் தேதி அறிவித்து விட்டால், புதிய திட்டங்களை துவங்க முடியாது.எனவே, கயிறு வாரியத்துக்கு ஒதுக்கிய நிதியை, அறிவித்த திட்டங்களுக்கு செலவிட்டு வருகிறோம். தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதியை செலவிட முடியவில்லை. இதுகுறித்து, தமிழக அமைச்சரை சந்திக்க, நேற்று வரை முயற்சித்தும் பலனில்லை. பிரதமர் அலுவலக அமைச்சர் மற்றும் பிற துறை அதிகாரிகளைக் கூட ஓரிரு நாளில் சந்திக்க முடிகிறது.
தொழில் பூங்கா: தமிழக அமைச்சரை, மூன்று மாதங்களாகியும் சந்திக்க முடியவில்லை. விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில், கயிறு தொழில் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட பணத்தை, கர்நாடக மாநிலம், கோலார் பகுதியில், தொழில் பூங்கா அமைக்க முதலீடு செய்ய முடிவு செய்துள்ளோம். மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை இணை செயலர் இதற்கான ஆய்வுகளை முடித்துள்ளார். கயிறு வாரியத்தின் துணைக் குழுக் கூட்டம், கொச்சியில், பிப்., 11ம் தேதி நடக்கிறது. இக்கூட்டத்தில், கோலாரில் கயிறு பூங்கா அமைக்கவும், தமிழகத்துக்கு ஒதுக்கி, செலவிட முடியாமல் உள்ள நிதியை, கோலார் கயிறு பூங்கா அமைக்க செலவிடவும் அனுமதி அளிக்கப்படும்.இவ்வாறு, ராயர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|