பதிவு செய்த நாள்
31 ஜன2014
11:06
தமிழகத்தில் இருந்து கை நழுவ இருந்த, கயிறு தொழில் பூங்கா திட்டம், "தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் மீட்கப்பட்டுள்ளது. மார்ச், 31ம் தேதிக்குள், பூங்கா அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த, தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மத்திய அரசின், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் கீழ், மத்திய கயிறு வாரியம் இயங்குகிறது. 2013 14ல், நாட்டின் பல பகுதிகளில், கயிறு வாரியத்தின் கீழ், தொழில் பூங்காக்கள் அமைக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது; முதல் கட்டமாக, 500 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில், 200 ஏக்கரில் கயிறு தொழில் பூங்கா அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு, மத்திய கயிறு வாரியம், 70 கோடி; தமிழக அரசு, 10 கோடி; கதர், கிராம சர்வோதய சங்கம், 20 கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இதில், மத்திய அரசு சார்பில், 70 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது.
ஆனால், "வழுதரெட்டி கிராமத்தில் நிலம் ஒதுக்கவும், மாநில அரசின், 10 கோடி ரூபாயை அளிக்கவும், தமிழக அரசு முன்வரவில்லை' என, கயிறு வாரிய துணைத் தலைவர் ராயர் குற்றம் சாட்டியிருந்தார். இதற்காக, தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சரை சந்திக்க பலமுறை முயன்றும், அனுமதி கிடைக்கவில்லை. எனவே, இத்திட்டம், கர்நாடகாவிற்கு கொண்டு செல்லப்படும் எனவும், அவர் தெரிவித்து இருந்தார். இது குறித்த விரிவான செய்தி, "தினமலர்' நாளிதழில், நேற்று வெளியானது. இதைத் தொடர்ந்து, தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மோகன், கயிறு வாரியத்தின் துணைத் தலைவர், ராயரை, நேற்று அழைத்துப் பேசியுள்ளார்.
இதுகுறித்து, ராயர் கூறியதாவது: வழுதரெட்டி கிராமத்தில், கயிறு தொழில் பூங்கா அமைக்க, நிலம் ஒதுக்கவும், தமிழக அரசின் பங்குத் தொகை, 10 கோடி ரூபாயை விடுவிக்கவும், அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். லோக்சபா தேர்தல் நெருங்குவதால், மார்ச், 31ம் தேதிக்குள், கயிறு தொழில் பூங்கா அமைப்பதற்கான பணி துவங்கும் எனவும், அமைச்சர் உறுதியளித்தார். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|