பதிவு செய்த நாள்
01 பிப்2014
11:34
வாஷிங்டன்: இந்தியா விமான போக்குவரத்து துறையின் பாதுகாப்பு தரத்தை அமெரிக்காவின் விமான போக்குவரத்து ஆணையம் குறைத்துள்ளது. இந்திய விமான போக்குவரத்து துறையின் பாதுகாப்பு இரண்டாம் தரத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க முடியாது என கூறப்படுகிறது.
சர்வதேச விமான போக்குவரத்து ஆணையம் விதித்த விதிமுறைகளை சரியாக பின்பற்றப்படாததால் இந்திய விமான போக்குவரத்து துறையின் தரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இந்திய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தரம் குறைக்கப்பட்டதால் ஏர் இந்தியா மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள், அமெரிக்காவுக்கு கூடுதலாக விமானங்கள் இயக்க முடியாது. தரம் குறைக்கப்பட்டுள்ளது, இந்திய விமானங்களின் பாதுகாப்பு குறைந்து போயுள்ளது என்ற அர்த்தமல்ல என்றும், பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை இந்திய விமான போக்குவரத்து ஆணையம் சரியாக கண்காணிக்கவில்லை என்பது தான் அர்த்தம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய விமான போக்குவரத்து துறையின் பாதுகாப்பு தரம் குறைக்கப்படாமல் இருக்க, இந்திய விமான போக்குவரத்து ஆணையம் பல நடவடிக்கைகளை விரைந்து எடுத்ததாகவும், இதற்காக அதிக ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் கையாள முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் வளர்ச்சியடைந்து வரும் இந்திய விமான போக்குவரத்து துறையின் சவால்களை எதிர்கொள்ள முடியும் என நம்புகிறது.
இந்திய விமான போக்குவரத்து துறை பற்றி,அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ள 33 பிரச்னைகள் பற்றி அறிக்கை அளித்துள்ளதாக இந்திய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் கூறியுள்ளது.
இந்திய விமான போக்குவரத்து துறை பற்றி கடந்த செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அமெரிக்கா ஆய்வு மேற்கொண்டது. அதில், இந்திய விமான போக்குவரத்து துறை பற்றி தெரிவித்துள்ள பிரச்னைகளை சரிசெய்வதற்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. இதனை சரிசெய்வதற்காக, இந்திய விமான போக்குவரத்து துறை, நேரடியாக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்களை தேர்வு செய்து கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இவர்களை தேர்வு செய்ய மத்திய தேர்வாணையத்தை அணுக தேவையில்லை எனவும், தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கவும் அனுமதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங், இந்திய விமான போக்குவரத்து துறையின் பாதுகாப்பு தரம் குறைக்கப்பட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது என்றும், இது ஆச்சர்யமாக உள்ளது என்றும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|