பதிவு செய்த நாள்
04 பிப்2014
12:38
புதுடில்லி: புதுடில்லி அருகே உள்ள, கிரேட்டர் நொய்டாவில், வரும், 7ம் தேதி, 'ஆட்டோ எக்ஸ்போ' என்ற, பிரமாண்ட மோட்டார் வாகன கண்காட்சி துவங்க உள்ளது. சி.ஐ.ஐ., சியாம், அக்மா ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும், 12வது வாகன கண்காட்சியில், 70 புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இதில், பன்னாட்டு நிறுவனங்களின், 26 புதிய வாகனங்கள் இடம்பெற உள்ளன. அவற்றில், 15 கார்களும் அடங்கும். உள்நாடு மற்றும் சர்வதேச நிறுவனங்களின், சிறிய கார்கள் முதல், அதிநவீன சொகுசு கார்ககள் வரை, 64 ஆயிரம் ச.மீ., பரப்பளவில், காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இத்துடன், கலப்பு எரிபொருள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார்களையும் காணலாம். மேலும், புதுமையான மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் என, பலவகை மோட்டார் வாகனங்களும், இக்கண்காட்சியை அலங்கரிக்க உள்ளன.
மாருதி சுசூகி நிறுவனம், கியர் இல்லாத, 'செலிரியோ' என்ற காரை இக்கண்காட்சியில் வைக்க உள்ளது. இந்தியாவில், இவ்வகையில் தயாரிக்கப்பட்ட முதல் கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், 'போல்ட்' மற்றும், 'செஸ்ட்' என்ற இரண்டு புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. ஹியோசங் நிறுவனம், 3 புதிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறது.
போர்டு நிறுவனம், இக்கண்காட்சியின் மூலம், 4 மீட்டருக்கும் குறைவான, சர்வதேச சிறிய கார் சந்தையில் கால் பதிக்க உள்ளது. வோக்ஸ்வேகன் நிறுவனம், புதிய வடிவமைப்பில், மேம்படுத்தப்பட்ட வசதிகளை கொண்ட 'போலோ' காரை அறிமுகப்படுத்துகிறது.
மேலும், ஆடி, பி.எம்.டபிள்யூ, ஸ்கோடா, பென்ஸ், வால்வோ, ஜெனரல் மோட்டார்ஸ், மகிந்திரா குழுமம், டி.வி.எஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் வாகனங்களும், இக்கண்காட்சியில் இடம் பெற உள்ளன. இத்துடன், ஹார்லி டேவிட்சன், டிரம்ப் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் மோட்டார் சைக்கிள்களையும் பார்வையிடலாம்.வரும், 11ம் தேதியுடன் இக்கண்காட்சி நிறைவடைகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|