பதிவு செய்த நாள்
19 பிப்2014
11:51
புதுடில்லி: ''கடுமையான பொருளாதார மந்த நிலை, சிக்கலான சூழ்நிலைகள் இருந்த போதிலும், நாட்டின் பொருளாதாரத்தை, வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்துள்ளோம்,'' என, மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கட்டுக்கடங்காமல் : பொருளாதாரத்தை, மேலும் வலுவடையச் செய்யும் வகையில்தான், தற்போதும், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நம் நாட்டை பொறுத்தவரை நிதிப் பற்றாக்குறை அதிகரித்து வந்ததுடன், பணவீக்கமும் கட்டுக்கடங்காமல் போனது. இந்நிலையிலும், பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்திடும் வகையில், தற்காலிக அடிப்படையில், குறைந்த அளவில் சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக, கடந்த, ஐந்து மாதங்களாக, தயாரிப்பு, பொறியியல், நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட பல துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, கடும் பின்னடைவை கண்டுள்ளன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான், சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
மத்தியில், 'ரிலையன்ஸ்' அம்பானி தான் ஆட்சி செய்கிறார் என, மேம்போக்காக கூறப்படும் கருத்துக்கள், பதில் அளிக்க தகுதியானவை அல்ல. உலகின் பல்வேறு நாடுகளும், சர்வதேச பொருளாதார சுணக்க நிலையில் சிக்கியிருந்தன. அந்நாடுகளும், பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. கடந்த, 2012 - 13ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டிலும், வரும், 2014 - 15ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டிலும், நாட்டின் பொருளாதாரத்தை நிலை நிறுத்திடும் வகையில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மானியங்களுக்காக அதிகளவில் செலவிடுவதாக, ஒரு சிலர் குற்றம் சாட்டுகின்றனர். மக்களால், தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆட்சி புரியும் போது, மக்களின் கோரிக்கைகளுக்கு, செவி சாய்க்காமல் இருக்க முடியாது.
அதிகரிக்க வேண்டும் : குறிப்பாக, பெரும்பான்மையான மக்கள், உணவு பொருட்கள் மற்றும் மண்ணெண்ணெயின் விலை, குறைவாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். மானிய விலையில் வழங்கப்படும், சமையல் எரிவாயு உருளையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, மக்கள் மத்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்தே, காங்கிரசின் துணைத் தலைவர் ராகுல், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தினார். மேலும், பார்லிமென்ட் உறுப்பினர்களும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தி வந்தனர். எந்த ஒரு அரசும், சொர்க்கத்திலிருந்து வந்து விடவில்லை. மக்கள் தேர்ந்தெடுப்பதால் தான் வாய்ப்பு கிடைக்கிறது. எனவே, மக்களின் தேவையை பூர்த்தி செய்வதே, அரசின் முக்கிய கடமை. இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|