பதிவு செய்த நாள்
19 பிப்2014
11:55
மும்பை: எண்ணூர் துறைமுகத்தில், 151 கோடி ரூபாயில், பன்முக சரக்கு பெட்டக முனையம் அமைக்கும் பணிக்கான ஆணை, இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் என, இத்துறைமுக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.ஏ.பாஸ்கராச்சார் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: தற்போது, எண்ணூர் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன், 3 கோடி டன்னாக உள்ளது. இதை, அடுத்த சில ஆண்டுகளில், 6.5 கோடி டன்னாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, நடப்பு நிதியாண்டில், கூடுதலாக 3.5 கோடி டன் சரக்கை கையாள்வதற்கான, நான்கு விரிவாக்க திட்டங்களுக்கு அனுமதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், 1.60 கோடி டன் சரக்கு பெட்டக முனையம் அமைக்கும் பணி, அதானி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தவிர, 50 லட்சம் டன் திரவ இயற்கை எரிவாயு, 90 லட்சம் டன் நிலக்கரி ஆகியவற்றை கையாள்வதற்கான முனையங்கள் அமைக்கும் திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சரக்கு பெட்டக முனையம் ஒன்றில், கூடுதலாக, 20 லட்சம் டன் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதற்கான விரிவாக்கத் திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டிற்குள், ஒப்புதல் அளிக்கப்பட்ட விரிவாக்க திட்டங்கள் மூலம், அடுத்த சில ஆண்டுகளில், எண்ணூர் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன், 6.50 கோடி டன்னாக உயரும். விரிவாக்க திட்டங்களுக்கு, 500 கோடி ரூபாய் திரட்டும் நோக்கில், ஆண்டுக்கு, 9 சதவீத வட்டியில், கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, 1,000 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 95 கோடி ரூபாய் தான் திரட்ட முடிந்தது. தற்போது, வட்டி விகிதம் அதிகம் உள்ளதால், நிர்ணயிக்கப்பட்ட தொகையை திரட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இவவாறு பாஸ்கராச்சார் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|