பதிவு செய்த நாள்
28 பிப்2014
12:57
சென்னை: நாட்டின் முதல், தபால் துறை ஏ.டி.எம்., மையத்தை, சென்னை, தி.நகர் தலைமை அஞ்சலகத்தில், மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் நேற்று துவக்கி வைத்தார்.
விழாவில், அவர் பேசியதாவது: இன்று, ஒரு புதிய முயற்சியில் தபால் துறை ஈடுபட்டுள்ளது. தபால் நிலையங்கள் தேவையா; யாராவது தபால் எழுதுவரா; யாராவது தபாலை படிப்பரா என, கேள்விகள் கேட்கப்படும் இந்த காலத்தில், புதிய யுக்திகளைப் புகுத்தி, தபால் துறை எழுச்சி பெற்று வருகிறது. குறிப்பாக கடிதப் போக்குவரத்து குறைந்தாலும், வேறு வழிகளில், தபால் துறை சிறப்பு பெற்று வருகிறது. கொரியர், பார்சல் சேவைகளை இன்னும் சிறிது காலத்திற்கு, தபால் துறை மூலம் செய்வதே சிறப்பாக இருக்கும் என்று பலரும் கருதுகின்றனர்.
மத்திய அரசின், இடைக்கால பட்ஜெட்டில், நாடு முழுவதும் உள்ள, 1.55 லட்சம் தபால் நிலையங்களில், தகவல் தொழில்நுட்பத்தைப் புகுத்த, 4,909 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தபால் துறையில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, இந்த ஏ.டி.எம்., மையம் பயனுள்ளதாக இருக்கும். ஆறு மாதத்திற்கு, சோதனை முறையில், இந்த ஏ.டி.எம்., செயல்படும். பின் எந்த வங்கி கணக்கிலும் இக்கார்டை பயன்படுத்தி, பணம் எடுக்கலாம். இதை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டியது, தபால் துறை மற்றும் வாடிக்கையாளர்களின் கடமை. இவ்வாறு, சிதம்பரம் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், தபால் துறை செயலர், பத்மினி கோபிநாத், தலைமை தபால் துறைத் தலைவர், மூர்த்தி, முதன்மை அஞ்சல் துறை தலைவர், மெர்வின் அலெக்சாண்டர் மற்றும் தபால் துறை உயரதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
11 பேருக்கு ஏ.டி.எம்., கார்டு : தி.நகர் ஏ.டி.எம்., மையத்திற்கு பிறகு, சென்னையில், கிரீம்ஸ் சாலை, மயிலாப்பூர் மற்றும் அண்ணா சாலை அஞ்சலகங்களில், ஏ.டி.எம்., வசதி செய்யப்பட உள்ளது.தி.நகர் ஏ.டி.எம்., மையத்தைப் பயன்படுத்த, 11 பேருக்கு, ஏ.டி.எம்., கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|