பதிவு செய்த நாள்
02 ஏப்2014
06:53
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நடப்பு, 2014 15ம் நிதியாண்டின் முதல் நாளான நேற்று, ஏற்றத்துடன் முடிவடைந்தது.ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்ட நிதி ஆய்வு கொள்கையில், வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை.இது, அநேக முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பின் படி இருந்ததால், பங்குச் சந்தைகளில் உடனடியாக எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஐரோப்பிய சந்தைகளில், வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. எனினும், சீனாவில் தயாரிப்பு துறை உற்பத்தி குறையும் என்ற தகவலால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம், ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.நேற்றைய வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் சாதன துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், வங்கி, ரியல் எஸ்டேட், பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 60.17 புள்ளிகள் அதிகரித்து, 22,446.44 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், விப்ரோ, சேசா ஸ்டெர்லைட், டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், ஹிண்டால்கோ, மாருதி, ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், ஐ.டி.சி., உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், சன்பார்மா நிறுவனப் பங்கின் விலை மாற்றமின்றியும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 16.85 புள்ளிகள் உயர்ந்து, 6,721.05 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|