பதிவு செய்த நாள்
11 ஏப்2014
13:44
வாஷிங்டன்: "இந்தியாவில் வர்த்தகம் புரிவது கடினம்' என, தனியார் துறையினர் கருதுவதாக, உலக வங்கி தலைவர், ஜிம் யாங் கிங் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில், இந்தியா உள்ளிட்ட பன்னாட்டு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியா, ஏராளமான கட்டுப்பாடுகளை கொண்டுள்ளது. குறிப்பாக, அரசின் வரன்முறைகள் ஊகிக்க முடியாத அளவிற்கு உள்ளன. இதன் காரணமாக, அங்கு வர்த்தகம் புரிவது கடினம் என்ற கருத்து, தனியார் துறையினருக்கு உள்ளது. இத்தகைய கருத்தை மாற்றும் நோக்கில், சிறப்பான சூழலை உருவாக்கி, வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களை செய்ய வேண்டும். இது, இந்திய அரசுக்கு, குறிப்பாக அதன் தலைமைக்கு மிக நன்றாக தெரியும். அதனால், அவர்கள் நிலைமையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி கவர்னர், ரகுராம் ராஜன் ஏற்கனவே சில பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அவை பயனளிக்கும் என, கருதுகிறேன்.
பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் சிதம்பரம் ஆகியோருக்கும், எதை செய்ய வேண்டும் என்பது குறித்து நன்றாகவே தெரியும். அரசின் கட்டுப்பாடுகளில் சீர்திருத்தம் மேற்கொண்டால், தனியார் துறை வளர்ச்சி காணும். இந்தியா, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, கல்வித் துறையை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஆரோக்கிய பராமரிப்பு துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இத்துறைகள் மட்டுமின்றி, வர்த்தக சூழலையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|